வாழ்வு - 6:
அனைவரும் அந்த வீட்டிற்கு செல்ல இவர்கள் இருவரும் தருண் ஹர்ஷியை அழைத்துக் கொண்டு சாப்பிடும் இடம் நோக்கி சென்றனர்.
இங்கு வீட்டிற்கு வந்தவர்கள் கல்யாண தேதியை சீக்கிரம் வைக்க வேண்டும் இப்போழுதே ஹர்ஷி சந்தியாவை விட மாட்டேங்கிறா..இன்னும் நாள் தள்ளி வச்சா பிள்ளை ஏங்கிப் போயிடுவா..என்று சந்திரா அனைவரிடமும் கூறினார்.
(உங்க பேத்தி ஏங்கிப் போவாளோ இல்லையோ உங்க பிள்ளை ஏங்கிப் போயிடுவான் போல…)
அவர் சொல்லவும் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த காலண்டரை எடுத்து வந்து பரமனிடம் குடுத்தார். அதை வாங்கிப் பார்த்தவர் வருகிற வெள்ளிக் கிழமை முகூர்த்த நாள் தான் சதா அதை விட்டா அடுத்த மாதம்தான் இருக்கு என்று கூறினார்.
வர வெள்ளிக் கிழமையா அதுக்கு இன்னும் மூணு நாளு தானே இருக்கு அதுக்குள்ள எப்படி என்று சேகர் கேட்கவும் அதான் அபி சிம்பிளா கோயில்ல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னான்ல என்று அவசரமாக கூறினார்.
அவருக்கு தன் மகனை சந்தியாவுடன் ஒன்றாகப் பார்த்ததில் இருந்து சீக்கிரம் கல்யாணம் முடிக்கனும்.
இந்த எட்டு மாதங்களும் அவர் போகாத கோவில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை. அவர் இறைவனிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான்.. எப்படியாவது என் பிள்ளை வாழ்க்கை சரியாகிடக் கூடாதா ஏதாவது ஒரு வழியை என் பிள்ளைக்குக் காட்டுக் கடவுளே...என்று தான் வேண்டுவார்.
ஆனால் இன்று தன் பேத்தியை வைத்துக் கொண்டு இருவரும் நிற்கையில் அத்தனை பொருத்தமாக இருந்தது.
சதாவிடம் வர வெள்ளிக் கிழமையே வச்சுக்கலாம் சதா என்று பரமன் கூறினார். பின் நம்ம பெரியக் கோயில்ல கல்யாணத்த வச்சுக்கலாம். வேற யாரும் வேண்டாம் சதா நம்ம வீட்டு ஆட்கள் மட்டும் போதும் சிம்பிளா முடிச்சிடலாம்.
கிராண்டா பண்ணினா பிள்ளைங்க இரண்டு பேருக்குமே சங்கடம் தான் சதா.. அதான் இந்த முடிவு என்றதும் அதுக்கென்னடா பிள்ளைங்க விரும்பினா எல்லாருக்கும் சொல்லி..
கொஞ்சம் நாள் கழிச்சு வரவேற்பு மாதிரி பண்ணிடலாம் என்று கூறவும் சரிடா பண்ணிடலாம் என்று அவர் கூற்றையும் ஏற்றுக் கொண்டார்.
பின் அனைவரிடமும் வெள்ளிக்கிழமை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டதும் அனைவருக்கும் சம்மதம் என்றதும் சரி நாளைக்கு கோயில் ஐயரைப் பார்த்து பேசிடலாம் என்று பரமன் கூறினார்.
அதற்கு ஆமோதிப்பாக தலையாட்டிய சதா கொஞ்சம் இருங்க இதோ வரேன் என்று பொதுவாக கூறிவிட்டுத் தன் அறைக்கு சென்றார்.
அவர் வரும் போது தன் கையில் ஒரு ஃபயில் கொண்டு வந்தார். அதைப் பரமனிடம் நீட்டி வாங்கிக்க சொன்னார். அதைக் காட்டி என்ன சதா இது..
இந்த ஃபயில்ல என்ன இருக்கு என்று கேட்டதும் என் பேருல இருக்கிற சொத்து என் பேரனுடைய பேருல இருக்கிற சொத்து அனைத்தையும் சந்தியா பேருக்கு மாற்றி எழுதுன பத்திரம் தான் பரமா...என்று கூறினார்.
அது உன்கிட்டையே இருக்கட்டும் என்றவரைப் பார்த்து அதில்லைடா பரமா...அர்ஜூன் போனப் பிறகு நான் ரொம்பவே உடைஞ்சிப் போயிட்டேன். சந்தியாவிற்காக தான் என் உயிர கையில் பிடிச்சிட்டு இருக்கேன்..
எனக்கு ஒரு வேளை ஏதாவது ஆச்சுன்னா அவளை விட்டுடாதீங்கடா அவள் ரொம்ப பாவப்பட்ட பெண் டா பரமா சிறுவயதில் இருந்து ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சவ என்று அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தார் பற்றியும் கூறினார்.
பின் தன் பேரன் அவள் குடும்பத்திலிருந்து அவளை மீட்டுக் கொண்டு வந்ததில் இருந்து அனைத்தையும் கூறினார். பிறகு சிறு வயதிலேயே திருமணம் ஆனதையும் அஜி இறந்தது வரை அனைத்தையும் கூறினார்.
அப்புறம் அர்ஜூன் இறந்ததை எங்க ரெண்டு பேராலையும் தாங்க முடியலை...அந்த வீட்டில் இருந்தா இன்னும் அவன் நியாபகம் வந்துக்கிட்டே இருக்குன்னு தான் பக்கத்துலயே இந்த வீட்டுக்கு மாறி வந்துட்டோம்.
அர்ஜூன் இருந்த வரைக்கும் அந்த பெரிய வீட்டில் தான் பிள்ளைகளோட சந்தோஷமா இருந்தோம். யார் கண்ணு பட்டுச்சோ எங்க அர்ஜுன் எங்களை விட்டுப் போயிட்டான்.
சந்தியாவின் கடந்த காலத்தைக் கேட்டவர்களுக்கு அவளுடைய குடும்பத்தின் மீது அவ்வளவு கோபம் வந்தது. இப்படியும் மனிதப் பிறவிகள் இருப்பார்களா என்று தான் தோன்றியது.
பரமன் சதாவை அணைத்துக் கொண்டவர் டேய் சதா.. ஏன் டா நல்ல விஷயம் பேசும்போது இப்படி சொல்ற உனக்கு ஒன்னும் ஆகாதுடா.. நாம நம்ம கொள்ளு பேரப்பிள்ளைகளை வளர்க்க தான் போறோம் நீ வேணாப் பாரு இது கண்டிப்பா நடக்கும்..என்று கூறினார்.
அபியும் சந்தியாவும் கல்யாணம் பண்ணி வதவதன்னு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுப்பாங்க நம்ம அவர்களை வளர்க்கலாம்டா என்று அவரை சமாதானப் படுத்தினார்.
(நீங்க சொன்னாலும் சொல்லைனாலும் அதுக்குத்தான் அங்க ஒருத்தன் எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருக்கான்…)
நம்ம அர்ஜூனே அவங்களுக்கு பிள்ளையா பிறப்பான் மாமா நீங்க வேணும்னா பாருங்க என்று சந்திராவும் கூறினார்.
நீ சொன்னது நடந்தா சந்தோஷப் படுகிற முதல் ஆள் நான் தான் மா என்று தன்னை சமன்படுத்திக் கொண்டு கூறினார்.
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க அங்கு ஒருவன் எப்போடா கையில் கோழி சிக்கும்...எப்போ பிரியாணி போடலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹர்ஷியை சந்தியாவும் தருணை அபிமன்யுவும் தூக்கிக்கொண்டு சாப்பிடும் இடத்திற்கு வந்தனர். அங்கு வேலை செய்யும் சிவகாமி இருவரையும் பார்த்து சந்தியாவிடம் யாரு பாப்பா இது என்று கேட்டதும் நான் கட்டிக்கப் போறவர் அம்மா என்று சிறு வெட்கத்துடன் தலையைக் கீழே குனிந்துக் கொண்டே கூறினாள்.
அவள் கன்னத்தை வழித்து என் ராசாத்தி இப்போவாச்சும் சம்மதிச்சியே.. ஐயாவோட மனசு இப்போதான் குளிர்ந்திருக்கும் வயசுப் புள்ளை வாழாம இருக்குறது அவருக்கு எவ்ளோ வேதனை தெரியுமா..இனிமே அந்த மனுஷன் நிம்மதியா இருப்பாரு..
எவ்ளோ நாள் தான் பாப்பா அர்ஜூன் தம்பிக்காக அழுதுட்டு இருப்ப உன் வாழ்க்கையைப் பாரு பாப்பா என்றவர் அபிமன்யுவிடம் பக்கம் திரும்பியவர் உங்க பேரு என்ன தம்பி என்று கேட்டதும் அவன் அபிமன்யு என்கவும் எங்க சந்தியா பாப்பாவ பத்திரமா பார்த்துக்கோங்க தம்பி..நல்ல பிள்ளை என்று கூறியவர் இருவரும் சாப்பிட சாப்பாடு எடுத்து வந்து வைத்தார்.
சந்தியா அவரிடம் நாங்க போட்டு சாப்பிட்டுக்கிறோம் ம்மா நீங்க போய் ஓய்வு எடுங்க என்றதும் அவர் அங்கிருந்து கிளம்பினார்.
அபிமன்யுவோ அவள் வெட்கப்பட்டுக் கொண்டே அவரிடம் சொல்வதைப் பார்த்து மயங்கியவன் அடுத்து சிவகாமி அர்ஜுனை பற்றி பேசியதில் தன் மயக்கம் தெளிந்தான்.
என் தியா எனக்காக மட்டும் தான் அழனும் என்னை மட்டும்தான் அவள் உயிரா நினைக்கனும் அவளுக்கு நான் மட்டும் தான் முக்கியமா இருக்கனும் என்று நினைத்துக் கொண்டு தன் உரிமையை எப்படியாவது அவளிடம் நிலைநாட்ட சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அர்ஜூன் தன் நெருங்கிய நண்பனே ஆயினும் அவனுக்கு இப்பொழுது அவன் தியா தான் அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.அவளை பார்த்த உடனே ஏதோ ஓர் உணர்வு அவள் தனக்கு மட்டுமே.. அவள் தன் உடைமை என்பது போல் தோன்றியது.
சிவகாமியை அனுப்பி வைத்தவள் அவன் பக்கம் திரும்பினாள்.அவனோ தன் யோசனையில் தீவிரமாக இருந்தான்.அவனை என்னங்க என்று அழைத்தாள்..
அவன் இன்னும் தன் நினைவிலே உழன்று கொண்டிருக்க அவன் தோளை தட்டி என்னங்க என்று அழைத்ததும் தான் கனவில் இருந்து திடுக்கிட்டு விழித்தவன் போல சிறிது நேரம் எடுத்துக் கொண்டான் தன் நிலைக்கு வர…
அப்பொழுது தான் கவனித்தான் அவள் கை தன் தோளில் இருப்பதைக் கண்டு புன்னகைத்தான்.அவளை நோக்கி தன் தோள் மேல் படிந்திருந்த அவள் கையைப் பார்த்து கண்களால் சைகை செய்தவன் படக்கென்று அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
அவன் தன்னை பார்த்து சைகை செய்யவும் என்னவென்று புரியாமல் பார்த்தவள் அவன் கண்ணடிக்கவும் பட்டென்று தன் கையை எடுத்துக் கொண்டவளுக்குப் படபடவென்று நெஞ்சம் அடித்துக் கொண்டது.
சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்காமல் உட்காருங்க சாப்பிடலாம் என்று கூறியதும் அமர்ந்தவன் தன் மடியில் தருணை அமர்த்திக் கொண்டான்.
ஒரு பிளேட்டை எடுத்து அவன் முன்னால் வைத்து சாப்பாடு பறிமாறினாள். சாப்பாடு போட்டு குழம்பை ஊற்றியவள் பொரியலை வைக்க அவள் கையைப் பிடித்தான்.
அவன் கையைப் பிடித்ததும் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்துப் பார்த்துத் தன் கண்களை விரித்தாள்.ஏன் டி இவ்ளோ பெருசா விரிக்கிற ஏற்கனவே விழுந்தவன் தான் இன்னும் என்னால் எழ முடியலை என்று தன் மனதிற்குள் புலம்பினான்.
அவன் மனசாட்சியோ டேய் அபி உனக்கே இது ஓவரா தெரியலை பார்த்து ஒரு இரண்டு மணிநேரம் ஆயிருக்காது அதுக்குள்ள எப்படிடா என்று கேட்க அதெல்லாம் உனக்கு புரியாது ஓடு என்று அதனை விரட்டியவன் தன் குரலை செறுமிக்கொண்டு தியா பேபி எனக்கு ஊட்டி விடு என்று அவன் கூறியதும் அவனை கலவரமாக பார்த்தாள்.
விரிந்திருந்த பேராழி கண்ணில் மீண்டும் விழுந்தவன் தருணிடம் புகார் வாசித்தான். தருண் குட்டி இங்க பாருடா அம்மா உங்களுக்கெல்லாம் ஊட்டி விட்டாங்க அப்பாக்கு ஊட்டி விட சொன்னா முறைச்சுப் பார்க்கிறாங்க…
நீ இதெல்லாம் கேட்க மாட்டியா தருக்குட்டி என்று அவனை பெரிய மனிதனை போல பாவனை செய்து அவனிடம் புகார் கூறினான்.அவன் கூறியதும் தருணும் சந்தும்மா அபிப்பா பாவம்தானே ஊட்டி விடுங்க என்றதும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தாள்.
அவள் அப்படியே நிற்பதைப் பார்த்து தருணிடம் எனக்கு பசிக்குதுடா தருக்குட்டி என்றதும் அதில் தன் பயம், வெட்கம் அனைத்தையும் தூக்கிப் போட்டவள் சாதத்தைப் பிசைந்து அவன் வாயருகே கொண்டு போனாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அவள் கையால் சாதத்தை வாங்கிக் கொண்டான். சாதத்தை மட்டுமா சாப்பிட்டான் அவள் வெண்டைப் பிஞ்சு விரல்களையும் அல்லவா சாப்பிட்டான். பிள்ளைகள் முன்பு தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட்டாள்.
ஒவ்வொரு தடவையும் அவன் சாதத்தை சாப்பிடும் போதும் தன் விரல்களையும் விட்டு வைக்காமல் நாவால் உதட்டால் வருடிக் கொண்டிருந்தான்.அந்த அவஸ்தை அவளால் தாங்க முடியாமல் ஏன் இப்படி எல்லாம் பண்றாங்க என்று நினைத்துக் கொண்டே ஊட்டி விட்டாள்.
தன் அப்பாவிற்கு அம்மா ஊட்டுவதைப் பார்த்து உற்சாகமடைந்த ஹர்ஷி தன் இருக்கைகளையும் சேர்த்து தட்டினாள்.
அவள் அவஸ்தைப் படுவதைப் பார்த்து ரசித்தவன் போதும் இதோடு நிறுத்திக்கலாம் என்று நினைத்தவன் போதும் என்கவும் அப்பாடி என்று நினைத்துக் கொண்டு தன் கையைக் கழுவினாள்.
தருண் சந்தியாவை அழைத்து சந்தும்மா எனக்கு துடைச்சி விடுவீங்கல்ல என்று தன் வாயைக் காட்டிக் கூறியவன் அப்பாவுக்கும் துடைச்சி விடுங்க என்றதும் அபிக்கு ஆயிரம் வாட்ஸ் பல்பு போல் முகம் பிரகாசமானது.
வாடா மகனே சூப்பர் நான் சொல்லிக் குடுக்காமலே பட்டையே கிளப்புறியே என்று மனதுக்குள் அவனை பாராட்டியவன் வெளியே ஒன்றும் தெரியாதது போல் சிரிக்க முயன்ற உதட்டைக் கட்டுப்படுத்தி இறுக்கி வைத்துக் கொண்டான்.
சிறிது நேரம் தயக்கத்துடன் நின்றவள் பிறகு என்ன நினைத்தாளோ அவன் அருகில் வந்து தண்ணீரைத் தொட்டு அவன் அழுத்தமான உதட்டைத் தன் நடுங்கும் விரல்களால் துடைத்தாள்.
அப்பொழுது கிடைத்த சந்தர்ப்பத்தை அபிமன்யு விடவில்லை அவள் வெண்பஞ்சு விரல்களுக்கு மீசை முடிக்குத்த ஒரு அழுத்தமான முத்தத்தை வைக்கவும் கூச்சத்தில் தன் கையை விலக்கிக் கொண்டாள்.
அவள் விலகியதும் சிரித்தவன் எழுந்துக் கொண்டு தருணிடம் தருண் நமக்கெல்லாம் அம்மா ஊட்டி விட்டாங்கள்ல்ல அதனால நாம அம்மாக்கு ஊட்டலாமா என்று கேட்டதும் அதிர்ந்து அவனைப் பார்த்து அதெல்லாம் வேண்டாம் நானே சாப்டுக்கிறேன் என்று கூறினாள்.
அவள் அப்படி கூறவும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தருணிடம் சின்னப் பிள்ளை போல் புகார் வாசித்தான்.
அதன் பிறகு அவன் செய்த செயலில் சந்தியா "அய்யோ..என்ன இவங்க இப்படி எல்லாம பண்றாங்க…" என்று மனதுக்குள் அலறினாள்.
அபி என்ன பண்ணியிருப்பான்….
வாழ்வு சிறக்கும்….
0 Comments