வாழ்வு -3
"தாத்தா இவ்வளவு சீக்கிரம் ஏன் இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே.." என்றதும் "இதுதான் மா சரியான நேரம்.. நீ சொன்ன கண்டிஷனுக்கு நான்தான் ஒத்துக்கிட்டேனே.. இப்போகூட என் நண்பன் கிட்ட அவங்க வீட்டுக்குப் பக்கத்துலையே வாடகைக்கு வீடு பார்க்க சொல்லிருக்கேன்" என்று கூறினார்.
அப்பொழுதும் அவள் முகம் தெளியாமல் இருக்கவும் அவள் தலையை வருடி "என்னடா யோசிக்கிற" என்றதும் "தாத்தா" என்று தயங்கியவள் "எனக்கு பயமா இருக்கு தாத்தா அவங்க யாரையும் எனக்கு தெரியாது.." என்று கூறினாள்.
"அவங்க எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும்டா.. சென்னையில் தான் இவ்வளவு நாள் இருந்தாங்க.. நம்மை விட பணக்காரங்க..இங்கு விருத்தாசலத்துல மெயின்லயே பிளாட் வாங்கி போட்டுருக்காங்க.. ரெண்டு துணிக்கடை வேற இருக்கு.."
"அதுமில்லாம இப்போ உனக்கு பார்த்துருக்கேன்ல அந்த பையன் பேரு அபிமன்யு.. நம்ம அர்ஜுன் கூட காலேஜ்ல ஒன்னா படிச்சப் பையன் தான்டா.. ரொம்ப நல்ல பையன்.. அர்ஜுன் கூட படிக்கும் போது இங்க நம்ம வீட்டுக்கு வந்துருக்கான்.."
அத்தனை நேரம் பதட்டத்தில் இருந்தவள் அர்ஜுனின் நண்பன் என்றதும் நிம்மதி அடைந்தாள். அஜி அத்தானோட நண்பனா இருந்தா கண்டிப்பா நல்லவங்களா தான் இருப்பாங்க என்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை முதல் நாளே நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் என தெரியப்படுத்தப்போகிறான் என்று.
தன் தாத்தாவிடம் "என்ன பெயர் தாத்தா சொன்னீங்க" என்றதும் "அபிமன்யு மா வயது 30 நம்ம அஜி வயசு தான் அவனோட பொண்டாட்டி பிரசவத்துல இறந்து போயிடுச்சாம்.. எட்டு மாத குழந்தைய வச்சுக்கிட்டுத் தவிக்கிறான் என்று சொன்னதுமே எனக்கு பாவமா போயிடுச்சுமா.."
"அந்த பொண்ணு இறந்த பிறகு அங்கே இருக்கப் பிடிக்காம இங்க சொந்த ஊருக்கே வந்துட்டாங்கலாம்..நமக்கு தெரிஞ்ச பையன் நல்ல பையன் அதனால்தான்டா தாத்தா உன்ன இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்.."
"சந்தியா பயப்படாதடா.. அவங்க எல்லாம் தங்கமான மனுஷங்க நான் உனக்கு கெடுதல் நினைப்பேனா.. அதுமில்லாம நானும் உன்கூடவே இருப்பேன் எதுக்கும் கவலைப்படாதடா நிம்மதியா போய் தூங்கு சரியா.. நாளைக்கு ஆசிரமத்துக்குப் போகனும் இல்லையா.." என்றதும் "ஹிம்ம் சரி தாத்தா நீங்களும் தூங்குங்க தாத்தா.." என்று விட்டு தனது அறைக்கு சென்றாள்.
அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு ஆசிரமம் உண்டு.அர்ஜூன் ஆரம்பித்தது தான் அவன் போன பிறகு அவர்கள்தான் ஆட்கள் வைத்தப் பார்த்துக் கொள்கிறார்கள்.
அந்த ஆசிரமம் அர்ஜூனின் கனவு என்று கூட சொல்லலாம். தினமும் அங்கு போய் தன் மன ஆறுதலுக்காக கொஞ்ச நேரம் அங்கு இருக்கும் சிறுபிள்ளைகளுடன் சந்தியா நேரம் செலவழிப்பாள்.
அங்கு சென்றால் அர்ஜுன் தன் அருகில் இருப்பது போலவே உணர்வாள்.அதனால் அவள் அதிக நேரம் அந்த ஆசிரமத்தில் தான் இருப்பாள்.
அவளுக்கு தெரிந்தது எல்லாம் தாத்தா, தன் பிரியத்துக்குரிய அஜி அத்தான் அந்த ஆசிரமத்தில் இருக்கும் சிறுபிள்ளைகள் இவர்கள் மட்டுமே சந்தியாவின் உலகம். இதை தவிர வேறு எதுவும் தெரியாது..தெரிந்து கொள்ளவும் அவள் விருப்பப்படவில்லை.
சந்தியாவைப் பொருத்த வரையில் தன் அத்தான் தாத்தா இவர்கள் இருவரும் தான் நல்லவர்கள். அவளைப் பொருத்தவரை அவளுடைய அம்மா அப்பா அண்ணன் மூவரையும் என்றோ இறந்து விட்டார்கள் அவர்கள் இருந்தும் ஒரு பிரயோஜனம் இல்லை என்று தான் கூற வேண்டும்.
தன் அறைக்கு வந்தவள் அர்ஜுனின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தாள். "அத்தான் உங்க ஃப்ரண்ட் தான் மாப்பிள்ளையாம் பேரு அபிமன்யுன்னு தாத்தா சொன்னாரு.. உங்களை மாதிரியே அவரும் நல்லவரா அத்தான்? உங்க நண்பனா இருந்தா கண்டிப்பா நல்லவரா தான் இருப்பாரு இல்லை அத்தான்.."
"ஆனால் அவர் ரொம்ப பாவம் அத்தான் அவர் மனைவி இறந்து போய்ட்டாங்களாம் ஒரு குட்டிப் பாப்பா அவருக்கு இருக்காம்.. சின்ன குழந்தையை வச்சிக்கிட்டுப் பாவம் கஷ்டப் படுறாராம் தாத்தா சொன்னாரு..அவரோட மனைவிய ரொம்ப லவ் பண்ணுறாரு போல அவங்க இறந்ததும் அந்த ஊரே வேண்டாம்னு இங்க வந்துட்டாங்களாம்.."
"அந்த குட்டிப் பாப்பா பாவம் தானே அத்தான் நான் அவங்க வீட்டுக்குப் போனதும் அந்த குட்டிப் பாப்பாவ விடவே மாட்டேன்.. என் கூடவே வச்சுப்பேன்" என்று புகைப்படத்தில் தன்னை பார்த்து சிரித்தவனிடம் கூறினாள்.
அங்கு அபி நெஞ்சில் தன் மகளைக் கிடத்தித் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று அவனுக்குத் தெரியவில்லை.. ஆனால் ஏதோ மனதுள் ஒரு இதம் பரவியதை அவன் உணர்ந்தான்.
தனக்கென்று ஒருத்திவரப் போகிறாள் என்பதாலா இல்லை தன் மகள் தாய் பாசத்திற்கு இனி ஏங்க தேவையில்லை என்றாதாலா ஆனால் ஏதோ இதமாக இருந்தது.
ஒருபக்கம் பயமாகவும் இருந்தது எங்கே தன் மகளை அவள் கொடுமைப் படுத்தினால் என்ன செய்வது ஏனெனில் எந்த நேரமும் தன் மகளுடன் அவனால் இருக்க முடியாதல்லவா இப்படியே யோசித்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினான் என்றே தெரியாமல் அப்படியே தூங்கி இருந்தான்.
காலையில் எழுந்ததும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சந்தியா தன் தாத்தாவிற்கு சாப்பிட எளிமையாக சமையலை முடித்து விட்டு அவரிடம் வந்து "தாத்தா சாப்பாடு வச்சுருக்கேன் சாப்பிடுங்க நான் ஆசிரமத்துக்கு போய்ட்டு வரேன்" என்று கூறியவள் ஆசிரமத்திற்கு கிளம்பினாள்.
"கொஞ்சம் சீக்கிரம் வரப் பாருடா சந்தியா மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துருவாங்க உன்னை அவங்க பார்க்கனுமாம்" என்றதும் "சரி தாத்தா" என்று கிளம்பினாள்.
வெளியே சென்றவள் ஏதோ மறந்தவளாக திரும்பி உள்ளே வந்து "தாத்தா சாக்லேட் வாங்கிட்டு வர சொன்னேனே வாங்கிட்டு வந்தீங்களா தருண் கேட்டுக்கிட்டே இருந்தான்…" என்று கூறினாள்.
"அந்த பிரிட்ஜில் பாரு மா வச்சுருக்கேன்.. அந்த சின்னக்குட்டிக்கு சாக்லேட் இருந்தா தான் சாப்பாடு இறங்குமா.. வரேன் மாலை நேரமா வந்து அவன் கிட்ட பேசிக்கிறேன்.." என்று கூறினார்.
"தாத்தா அவன் சிரிச்சு சிரிச்சு மயக்கிடுறான்.." என்று சிரித்தவள் அவரிடம் கூறிவிட்டுக் கிளம்பினாள். அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி ஒரு பெரிய வீடு இருந்தது அந்த வீட்டைப் பார்த்தால் ஆசிரமம் என்றே சொல்ல மாட்டார்கள். பெயர் பலகை வைக்க வேண்டாம் என்று அர்ஜூன் கூறியதால் பெயர் பலகைக் கூட வைக்கவில்லை.
சந்தியா எப்பொழுதும் காலையில் அங்கிருக்கும் பிள்ளைகளுடன்தான் உணவருந்தவாள்.அதும் இந்த தருண் குட்டி இவள் சாக்லேட் குடுத்து ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவான்.. இவளும் அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்திருந்தாள்.
தாத்தா கூட அடிக்கடி சொல்லுவார் அவனுக்கு நீ செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கா சந்தியா பாரு சாப்பாடே சாப்பிட மாட்டேங்கிறான் என்று கூறுவார். பெரியவனா ஆனா சரியா போய்டும் என்று சமாதானப் படுத்துவாள்.அவன் கேட்கும்போது கொடுக்காம இருக்க முடியலை தாத்தா என்று கூறுவாள்.
அபி வீட்டில் காலையில் ஹர்ஷி தான் முதலில் எழுந்து தன் தந்தையின் நெஞ்சில் குப்புற படுத்து அவன் இரண்டு நாள் ஷேவ் பண்ணாமல் தாடியுடன் இருந்த கன்னத்தை தன் பிஞ்சு கரங்களால் தட்டிக் கிள்ளி அவனை எழுப்பினாள்.
அவள் எழுப்பவும் எழுந்தவன் தூக்கம் இன்னும் அவனை நீங்காத கரக்கரத்தக் குரலில் "ஹர்ஷிக்குட்டி எழுந்துட்டீங்களா.."என்று அவளைத் தன் நெஞ்சில் நிற்க வைத்து அவள் பிஞ்சு கால்களில் முத்தமிட்டான்.
அவள் பிஞ்சு பாதத்தில் அவன் மீசை முடி குத்த முத்தமிட்டதும் கூச்சத்தில் கால்களை உதைத்து சிரித்தாள்.அவள் சிரிப்பதைப் பார்த்துத் தானும் சிரித்தவன் "என் குட்டிப் பொண்ணு சிரிக்குறீங்களா.." என்று அவள் நெற்றியில் தன் நெற்றியால் மெதுவாக முட்டினான்.
பின்பு அப்படியே எழுந்து பிரஷ் ஆயிட்டுக் "கீழே போகலாமா" என்று அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவளுக்கு நேப்கின் மாற்றி விட்டு அவனும் முகம் கழுவி பல்துலக்கி கீழே வந்தான்.
அவன் கீழே வந்து பார்த்தபோது அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர். பரமனிடம் "எங்க தாத்தா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டு இருக்கீங்க.." என்று கேட்டதும் "பொண்ணு வீட்டுக்கு தான்ப்பா " என்று கூறினார்.
"நீயும் போய் கிளம்பு" என்றதும் "நான் எதுக்கு தாத்தா நீங்க போய் பேசி முடிச்சிட்டு வாங்க" என்று கூறினான்.
தேவி வந்து ஹர்ஷியிடம் "ஹர்ஷிக்குட்டி நம்ம இன்னைக்கு எங்க போறோம் தெரியுமா.. அம்மா பார்க்க போறோம்டா.. வாங்க வாங்க நம்ம போய் ரெடி ஆகலாம்.. அம்மா உன்னை முதல் முதலில் பார்க்கும் போதே அப்படியே ஸ்டன் ஆகி நிற்கனும்.."
"நம்ம ஏஞ்சல் டிரெஸ்லாம் போட்டு அழகா ரெடி ஆகலாம் வாங்க.." என்று தன் அறைக்கு தூக்கிச் சென்றாள்.
இங்கு ஒருவன் "அம்மா" என்று சொன்னதுமே அதிர்ந்து நின்றவன்தான் பரமனின் குரலில் தான் நினைவுக்கு வந்தான்.
"போய் கிளம்பு அபி நேரம் ஆச்சுப்பா.." என்றதும் மறுத்துக் கூற முடியாமல் "நீங்க முன்னாடி போய் பேசிட்டு இருங்க தாத்தா நான் நம்ம கடையில் கொஞ்சம் வேலை இருக்கு பார்த்துட்டு உடனே வரேன்.." என்று கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டு யோசித்தவர் "சரி அபி சீக்கிரம் வா" என்றதும் அவன் கடைக்குக் கிளம்பிச் சென்றான். இவர்கள் அனைவரும் சந்தியா வீட்டிற்குக் கிளம்பி வந்தனர்.
இவள் இந்த பக்கம் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலே சேகர், சந்திரா, தேவி, பரமன், ஹர்ஷிதா அனைவரும் காரில் வந்திறங்கினர்.
சாப்பிட அமர்ந்த சதாசிவம் கார் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்து வாங்க என்று உள்ளே அழைத்துச் சென்றார். ஹர்ஷி புது இடத்திற்கு வந்ததும் திரும்பி திரும்பி அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். பரமனிடம் "அபி வரலையா பரமா.." என்று கேட்டார்.
"கடைல ஒரு வேலையாம் முடிச்சிட்டு உடனே வரதா சொன்னான்.. இப்போ வந்துருவான்டா" என்று கூறினார். "எங்கடா சந்தியாவை கூப்பிடு.." என்றதும் "இங்க பக்கத்துல நம்ம வீட்டுக்குப் போயிருக்கா.." என்றதும் "எந்த வீடு சதா.." என்றதும் தாங்கள் நடத்தும் ஆசிரமத்தைப் பற்றி கூறினார்.
"நல்ல விஷயம் டா சதா..எத்தனை பேர் இருக்காங்க" என்றதும் "இருபத்தைந்து பேரு எல்லாம் சின்ன சின்ன குழந்தைகள்.. அங்கேயே சமையல் ஆள் வைத்து சமைத்து பிள்ளைகளுக்கு தருவாங்க அங்கு பிள்ளைகளுடன் தான் சந்தியா சாப்பிடுவா..
இப்போ மணி எத்தனை என்று கடிகாரத்தைப் பார்த்து 8:30 ஆகுது.. எல்லாம் இப்போ சாப்பிட்டுட்டு இருப்பாங்க" என்றதும் "அப்போ வாங்களேன் அங்கேயே சாப்டுக்கலாம்.. நாங்களும் இன்னும் யாரும் சாப்பிடலை அப்படியே கிளம்பி வந்துட்டோம்.."என்று சந்திரா சொல்லவும் அனைவரும் அதனை ஆமோதித்துக் அந்த வீட்டிற்குக் கிளம்பினர்.
வாழ்வு சிறக்கும்….
0 Comments