Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 19

 


காதல்-19:

குருவுடன் கடைக்கு போயிட்டு வந்ததும் நேரே தன் தந்தையிடம் வந்த சைலஜா,"அப்பா இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? எனக்கு தலையே வெடிக்கிற போல இருக்கு.. எவனோ முன்னபின்ன தெரியாதவன் கூட என்னை கடை வரைக்கும் அனுப்புரீங்க சரி அதுக்கூட உதவிக்காகன்னு வச்சுக்கலாம்.."

"அங்க போனா அவன் என்னவோ பொண்டாட்டிக்கு சேலை எடுத்து கொடுக்கிற மாதிரி உரிமையா உனக்கு பிடிச்சது சேலை எடுத்துக்கோன்னு சொல்றான்.. என்னப்பா நடக்குது இங்க?" என்று கத்தினாள்.

"உனக்கும் அவருக்கும் அடுத்த வாரம் கல்யாணம் தான் நடக்கப்போகுது.. வேற ஒன்னும் இல்ல மா.." என்று அசால்டாக ஒரு பெரிய அணுகுண்டை அவள் தலையில் தூக்கி போட்டு அவளைப் பாசத்துடன் பார்த்தார்.

அவருக்கு அவளை பற்றிய கவலை சுத்தமாக இல்லை.. இனி அவளை குரு பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

அதனால் தான் இந்த முடிவை அவர் திடமாக எடுத்தார். 

அவர் குருவுக்கும் தனக்கும் கல்யாணம் என்று கூறியதுமே ஷாக்காகி நின்றவள் தன்னை சமன் செய்து கொண்டவள்,"அப்பா என்னோட சம்மதத்தை நீங்க கேட்கவே இல்லையே.."

"பையன் நல்லவன் மா.. உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் நான் சொல்லல.." என்று அவள் தலையை தடவ அவள் அவரின் கையை தட்டி விட்டவள் "எனக்கு அந்த கருவாப்பய வேண்டாம்.. எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல.. நான் அவனைக் கட்டிக்கணுமா..?"

"என் அழகென்ன அறிவென்ன.. அவனை போய் எனக்கு கட்டி வைக்கிறீங்க.. எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.. நான் அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.." என்று ஆவேசமாக கத்தினாள்.

"குருக்கு என்னமா குறைச்சல்? உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவான்.. அழகுங்கிறது கொஞ்ச நாள்தான்.. இந்த தோல் சுருங்கி போன பிறகு யார் கண்ணுக்கும் நாம தெரிய மாட்டோம்.."

"ஆனா குரு உன்மேல வச்சிருக்கிறது உண்மையான காதல்.. அது காலம் முழுக்க மாறாதுடா.." என்று அவர் அனுபவத்தில் கூற இவள் தையத் தக்கா என்று குதித்தாள்.

"அவனைக் கல்யாணம் பண்ண முடியாது" என்று ஒற்றைக்காலில் நிற்க அவரோ,"நான் அவனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் ஷைலு.. நீ அவனை தான் கல்யாணம் பண்ணி ஆகணும்.." என்று கடுமையாக உரைத்தவர் "உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்" என்று சென்றுவிட்டார்.

"அவள் மேல் மிகுந்த வருத்தம் தன்னை நம்ப வில்லையே" என்று.

அப்பொழுது கூட அவர் அவள் காதலித்திருப்பாள் என்று இந்த நிமிடம் வரை யோசிக்கவில்லை.

"நான் உனக்கு கெடுதல் நினைப்பேனா ஷைலுமா.. எல்லாம் உன் நல்லதுக்கு தான் டா" என்று மகளிடம் மனதோடு பேசினார்.

இங்கு தன் அறைக்கு வந்தவள் உடனே தன் அலைபேசியை எடுத்து அழைத்தது ஜோசப்புக்கு தான்.

அந்த பக்கம் எடுத்ததும் கதறி அழுதவாறு "ஜோ.. ஜோசப்.. இங்கே எனக்கு கல்யாணம்.. அந்த கருவாப்பயலோட நிச்சயம் பண்ணி இருக்காங்க டா.. அடுத்த வாரம் கல்யாணம்னு சொல்றாங்க.. எனக்கு பயமா இருக்கு ஜோசப்.. என்னை வந்து கூட்டிட்டு போயிடு ப்ளீஸ்" என்று அழ "பேபி.. பேபி எதுக்கும் கவலைப்படாதே.. நான் இருக்கேன்.. நான் தான் உன் கழுத்துல தாலி கட்டுவேன் கவலைப்படாத சரியா.. நீ ஜாலியா இரு கல்யாணம் ஆனா உனக்கும் எனக்கும் தான் நடக்கும்.." என்றதும் அவள் அழவும் "பேபி இதுக்கெல்லாம் நீ அழக்கூடாது நான் வருவேன் என்னை நம்பு.." என்றவன் சில பல முத்தங்களை வாரியிறைத்து அழைப்பை துண்டித்தான்.

புது தெம்பு வந்தது போல் உணர்ந்தவள் ஜோசப் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்கிற நம்பிக்கையில் அதன்பிறகு சாதாரணமாக வளைய வந்தாள்.

அவள் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க அதனை பார்த்த நடராஜன் அவளிடம் வந்தவர் அவள் தலையை வருடி,"எல்லாம் உன் நல்லதுக்கு தான் மா" எனவும் அவள் மனதுக்குள் 'நீங்க நினைக்கறது நடக்காது ப்பா.. அந்த கருவாப்பயலுக்கு நான் கேட்குதா.. அவன் என் கால் தூசுக்கு சமானம்' என்று உள்ளுக்குள் நகைத்தவள் வெளியில் தன் தந்தையை சிறு புன்னகையுடன் பார்த்தாள்.

கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கவே அவள் ஜோசப்பிற்கு அழைக்க அவன் எடுக்கவே இல்லை.

சரி அவன் வேலையாக இருப்பான் என்று நினைத்தவள் சில மணி நேரங்கள் கழித்து அடிக்கவும் அப்பொழுதும் எடுக்கவில்லை.

அவன் எப்படி எடுப்பான் அவன் தான் தங்க கடத்தலில் போலீசிடம் மாட்டி கொண்டு குடும்பத்துடன் ஜெயிலில் களி தின்று கொண்டிருந்தானே..

பாவம் அது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அவன் அப்பொழுதும் எடுக்கவில்லை என்றதும் பயம் பிடித்துக்கொண்டது.

'ஐயோ இந்த கருவாயனுக்கு தன்னை கட்டி வைத்து விடுவார்களோ' என்று நினைத்தவள் இப்போ வீட்டை விட்டு ஓடிப் போகலாம் என்றாலும் ஜோசப் அழைப்பை எடுக்கவில்லை.

'அவன் போனை எடுத்தாலாவது வீட்டை விட்டு செல்லலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதுதான் இடி என வந்து விழுந்தது அந்த செய்தி.

நடராஜன் வெளியே சென்ற பொழுது ஆக்சிடென்ட் ஆனதாகவும் அவர் மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தகவல் வரவே அந்த மருத்துவமனைக்கு விரைந்தாள்.

அங்கு சென்று பார்த்தால் உயிருக்கு போராடிய நிலையில் மூச்சுக்கூட விடமுடியாமல் தலையில் பெரிய கட்டு போட்டு படுத்திருந்த தன் தந்தையைத் தான்.

குருவும் அங்கு தான் இருந்தான் அவன் கையைப் பிடித்து அவள் கையையும் பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டவர் "என் பொண்ணை நல்லா பார்த்துக்கோ குரு.. எந்த நிலைமையிலும் அவளைக் கைவிட்டு விடாத.."

"நான் பொழைக்க மாட்டேன்.. இனி என் மகள் உன் பொறுப்பு.. அவளை பத்திரமா பார்த்துக்கோ.." என்றவர் தன் உதவியாளரிடம் கண்ணை காட்ட குருவிடம் தான் வைத்து இருந்த தாலியை கொடுத்தார்.

"உங்க கல்யாணத்தை பார்த்த நிம்மதியில் சந்தோஷமா நான் போய் சேருவேன்.." என்று திக்கித் திணறி கூற அவன் கையிலிருந்த தாலியை வாங்கி தன் பக்கத்தில் நின்றிருந்தவளின் கழுத்தில் கட்டினான்..

அதை பார்த்த அவரின் கண்கள் சந்தோஷத்தில் சிரிக்க அவரின் மூச்சும் நின்று இருந்தது.

அதனை உணர்ந்த சைலஜா அழவும் குருவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

நடராஜன் சென்ற பிறகு குரு தானே மருமகன் என்ற ஸ்தானத்தில் நின்று அனைத்து காரியங்களையும் செய்தான்.

ஷைலுவிடம் வந்தவன் "உனக்கு தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்துக்கோ.. நாம நம்ம வீட்டுக்கு போகலாம்" எனவும் எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல் அழுதாள்.

அவன் தன்னை கல்யாணம் செய்ததற்காகவா இல்லை தன் தந்தையின் மரணத்திற்காகவா.. அவளுக்கே அது வெளிச்சம்.

குரு அவள் அழுவதை காண முடியாமல் அவளை சமாதானப்படுத்த தோளில் கையை வைக்க "ச்சீ.. தள்ளிப் போ" என்று அவன் கைகளை தட்டி விட்டு அவள் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

"அழாதீங்க ஷைலஜா.. இங்கே எப்படி தனியா இருப்பீங்க.. வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்." எனவும் ஒரு முடிவுடன் தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டவள் அவனுடன் கிளம்பினாள்.

அவன் வீட்டிற்கு சென்றதும் "எனக்கு ஒரு தனி ரூம் வேணும்.. எந்த காரணத்தைக் கொண்டும் நீ அங்க வரக்கூடாது.." என்றவள் அவன் காட்டிய அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாலள்.

அவள் அப்பா விட்டுப்போன துக்கத்தில் இருக்கிறாள் என்று நினைத்தவன் அவளுக்கு சாப்பிட தானே சமைத்து எடுத்துச் சென்று அவள் அறைக் கதவைத் தட்டினான்.

சத்தம் கேட்டு கதவைத் திறந்தவள் "என்ன?" என்று எரிந்து விழுந்தாள்.

அப்பொழுதும் புன்னகை வாடாமல் "சாப்பாடு எடுத்துக்கோங்க.." எனவும் அவன் சிரிப்பு அவளை கோபம் மூட்டியதோ என்னவோ அந்தத் தட்டை தட்டிவிட்டு மெத்தையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அதையும் பொறுத்து கொண்டவன் அப்பொழுதும் சிரிப்பு மாறாமல் "உங்களுக்கு வேற எடுத்துட்டு வரேன்" என்று அவன் அங்கு இறைந்து கிடந்த சாப்பாட்டை சுத்தம் செய்தவன் திரும்ப அவளுக்கு சாப்பாடு எடுத்து வந்து அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.

அவனுக்கு இதுவரை தான் மட்டுமே இருந்த வீட்டில் தன் காதல் மனைவி இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

வேளைக்கு சாப்பாடு எடுத்து வந்து வைப்பவன் அவள் வெளியே வரும் பொழுது "எனக்கு நாளையோடு லீவு முடியுது அதனால சமையலுக்கு, துணி துவைக்க ஆள் வருவாங்க.. நீ பத்திரமா இருந்துக்கோ" என்று விட்டு சென்றுவிட்டான்.

இரண்டு மாதம் கடந்த நிலையில் அவளின் பிறந்த நாள் வரவே அதனை கோலாகலமாக கொண்டாட நினைத்த குரு அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு வைர அட்டிகை வாங்கியவன் அதற்கு பொருத்தமாக கைகளில் அணியும் பிரேஸ்லட்டும் காதணிகளும் முதற்கொண்டு வாங்கி வந்தான்.

பக்கத்தில் உள்ள ஹோட்டலில் உணவு ஆர்டர் கொடுத்து இருந்தவன் அவளுக்கு தெரியாமலே அவளின் கல்லூரி நண்பர்களை அழைத்து அவள் பிறந்த நாளைக்கு வருமாறு கேட்டுக் கொண்டான்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் அழைத்தான்.

அங்கு ரெடியாக வேண்டியவளோ அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு தன் பிறந்த நாள் கூட மறந்து போயிருந்தது குரு அவள் அறைக்கதவை தட்ட "என்ன?" என்று குரல் மட்டும் வந்தது.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க ஷைலு ப்ளீஸ்.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. நிறைய பேரு வருவாங்க.. சீக்கிரம் இந்த சேலையை கட்டி ரெடியாகுங்க.." என்று அந்த மேஜையின் மீது வைத்து விட்டு அகன்று விட்டான்.

எப்பொழுதும் கதவு திறந்துதான் இருக்கும் இருந்தும் அவன் மனைவியின் சொல்லை தட்டாதவன் இதுவரை அந்த அறைக்கு உள்ளே சென்றது இல்லை.

அவன் தான் வைத்துவிட்டு சென்ற சேலையை எடுக்கிறாளா என்று மறைந்திருந்து பார்த்தவனுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.

சற்று நேரம் நின்று பார்த்தவன் அவள் அப்படியே அமர்ந்து இருக்கவும் சோர்ந்து தன் அறைக்கு சென்று விட்டான்.

"இப்போ என்ன பண்ணுவது எடுக்கமாட்டேங்குறா" என்று அங்குமிங்கும் தன் அறையில் நடந்து கொண்டிருந்தவன் அவளை என்ன சொல்லி அழைத்து வருவது என்று தெரியவில்லை.

உனக்காக தான் இந்த விழா என்று கூறினாலும் சர்ப்ரைஸ் உடைந்து போகும் என்று அந்த முடிவையும் கைவிட்டான்.

பின்பு ஒரு முறை அவளிடம் மறுபடியும் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தவன் அவள் அறைக்கு கீழே இறங்கி வர அவளின் அறை கதவு சாத்தி இருந்தது.

கதவைத் தட்டவும் எந்த ஒரு பதிலும் இல்லை.. அவள் கதவைத் திறக்கவும் இல்லை.. 

"ஷைலு..ஷைலு.." என்று மீண்டும் கதவை பதட்டத்துடன் தட்ட ஒரு வழியாக கதவை திறந்தாள்.

அவன் எதிர்பார்த்த சைலஜாவாய்... அவன் மனைவியாய் முற்றும் முழுதாக தயாராகி நின்றாள்.

குருவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை இது ஷைலஜாவா என்று…

அவன் கொடுத்த பட்டுப்புடவையில் அழகு பதுமையாக நின்றவளை நம்ப முடியாமல் பார்த்தான்.

அவளைக் காண அவன் இரண்டு கண்கள் போதவில்லை அவனுக்கு கோடி கண்கள் வேண்டும் போலிருந்தது.

சைலஜா அவன் அலுவலகத்தில் உள்ள நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதற்காகத்தான் தன்னை கிளம்ப சொல்கிறான் என்று நினைத்தவாறு அவன் கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு கிளம்பினாள்.

அப்பொழுது கூட இது தனக்காக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.

அவளைப் பார்த்தவன் பார்த்தபடியே இருக்க அவன் பார்வை தனக்குள் ஏதோ மாற்றம் உண்டு செய்ததை உணர்ந்தாள்.

சற்று நேரத்திற்கு மேல் அவன் பார்வையை பொறுக்க முடியாமல் "போலாமா?" என்று அவனிடம் கேட்டாள்.

கனவிலிருந்து விழிப்பவன் போல "ஹான்.. போலாம் போலாம்" என்றவன் அவளை அழைத்துக் கொண்டு செல்ல அங்கு அவள் தோழிகள் இருந்ததை கண்டதும் குழப்பமான முகத்துடன் பார்த்தாள்.

இவங்கல்லாம் எதுக்கு வந்திருக்காங்க என்று.

பின்பு பலூன் வெடிக்க ஜிகினா மழை கொட்ட "ஹாப்பி பர்த்டே ஷைலு" என்று அனைவரும் வாழ்த்த அவள் வெட்ட பெரிய கேக்கும் வந்தது.

அவளால் இன்னும் நம்ப முடியவில்லை.. எனக்கு ஞாபகம் இல்லாத பிறந்தநாளை கண்டுகொண்டு இவ்வளவு மெனக்கெடல் எதற்கு என்றுதான் யோசித்தாள்.

பின்பு கேக்கை வெட்டி அவன் வாய் அருகே எடுத்து செல்ல அவளின் தோழிகள் "ஓஹோ" என்று கத்தி ஆர்ப்பரித்தனர்.

கொஞ்சமாக வாயில் வாங்கிக் கொண்டவன் அவளுக்கு ஊட்டிவிட்டான்.

பின்பு அங்கேயே வந்தவர்களுக்கு சாப்பாடு பஃபே முறையில் அரேஞ்ச் பண்ணி இருந்தவன் எல்லாம் கரெக்டா இருக்கா என்று பார்க்க சென்றான்.

அப்பொழுது அவளின் தோழிகள் அவளைச் சூழ்ந்து கொண்டு, ஒருத்தி "உன் ஹஸ்பண்ட் செமடி.. ரொம்ப கேரிங் உன் பிறந்தநாளையே இப்படி செலப்ரேட் பண்றாரு.. உன் மேல உள்ள காதல் அவர் கண்ணுல அப்பட்டமா தெரியுது டி.. வாழ்த்துக்கள்.." என்று மனதார வாழ்த்த அவள் பார்வை குருவையே வட்டமடிப்பது.

அவளுக்கு வாங்கிய நகைகளை எடுத்து வந்தவன் அவளிடம் கொடுத்து "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷைலு" என்று வாழ்த்தினான்.

அதனை வாங்கிக் கொண்டு திருப்பி திருப்பி பார்க்க "திறந்து பாரு ஷைலு" என்கவும் அவளின் தோழிகள் "பிரிச்சு பாரு டி" என்று ஊக்கினர்.

அவள் திறந்து பார்க்க அங்கு இருந்த நகைகளை கண்டு பிரம்மித்துப் போய் இருந்தாள் என்றால் அவளின் தோழிகளில் ஒருத்தி ஒருபடி மேலே சென்று "சார் உங்களுக்கு தம்பி இல்லனா பிரின்ட்ஸ் யாராவது இருக்காங்களா" என்று கேட்டாள்.

அவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

"ஏன் மா கேக்குற? எனக்கு அப்படி யாரும் இல்ல.. எனக்கு இருக்கிறது என்னோட ஷைலு மட்டும் தான்" எனவும் "இல்ல சார்.. உங்களுக்கு அப்படி யாராவது இருந்தா நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான்" என்று கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

பின் அனைத்தும் முடிந்து அனைவரும் சென்றதும் ஓய்வாக தன் அறையில் குரு படுத்திருந்தான்.

தன் அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தவன் அங்கு கதவருகில் சைலஜா நிற்கவும் "ஏன் ஷைலு அங்கேயே நின்னுட்ட? உள்ள வா" என்று அழைத்தவன் அவளை மெத்தையில் அமர வைத்து "என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா ஷைலு" என்று கேட்கவும் "இல்லை" என்று தலையை ஆட்டியவள் "ஆனா உங்கிட்ட ஒன்னு கேட்கணும்" என்றாள்.

"எதுக்கு எனக்கு இவ்வளவு செய்றீங்க?"

"இதுல என்ன இருக்கு ஷைலு.. நீ என்னோட மனைவி.. உனக்கு செய்யாமல் நான் யாருக்கு செய்யப் போறேன்.. எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான் உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.."

"அதுக்கும் மேல நான் உன்னை விரும்புகிறேன்.. நீ இல்லை என்றால் நான் இல்லை" என்று தன் மன கதவை திறக்க அவள் கூறினாள், "எனக்கும் உங்களை ஆரம்பத்தில் பிடிக்காது.. ஏன்? இந்தக் கல்யாணம் நடந்தது கூட எனக்கு பிடிக்கல.. ஆனா அதுக்கு பிறகு நான் எவ்வளவு கத்தினாலும் நீங்க கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் எனக்கு தேவையான எல்லாத்தையுமே செஞ்சிங்க.."

"என் மனசும் உங்கள் பக்கம் சாய ஆரம்பித்தது.. கொஞ்சம் கொஞ்சமா நீங்க மனசுக்குள்ள வந்துட்டீங்க.. ஆனா இன்னைக்கு நடந்தது நானே எதிர்பார்க்காத ஒன்று.. என் பிறந்தநாள் எனக்கு ஞாபகம் இல்லை.. உங்களுக்கு எப்படி?" என்கவும் "மாமா ஒரு முறை என் கிட்ட சொல்லி இருக்காரு" என்று கூறினான்.

பின்பு இருவரிடமும் சிறிது நேரம் மௌனம் நீடித்தது.

குருதான் பேசினான் "நேரம் ஆயிடுச்சு.. போய் சாப்பிட்டு தூங்கு ஷைலு.. டயர்டா இருப்ப" என்று கூற "எனக்கு பசிக்கல" என்றவள் "நான் இங்கே படுத்துகிறேன்" என்று அவன் அமர்ந்திருந்த மறு பக்கம் வந்து படுத்துகொண்டாள்.

குரு சிறு சிரிப்புடன் தானும் படுத்துக்கொண்டவன் 'எல்லாம் இனி சரியாகிவிடும்' என்ற நம்பிக்கையுடன் கண்ணயர்ந்தான்.

அதன்பிறகு இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்ததும் ஷைலு தாய்மை அடைந்தாள்.

குரு அவள் கால் தரையில் படாமல் உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.. பிள்ளையும் பிறந்தது..

அவனுக்கு ராம் பிரசாத் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். 

அதன்பிறகு ஜெய் பிரசாத் பிறந்தான்.

எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில் அவர்களின் வாழ்க்கையில் விதி தன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது.

ஜெபி பிறந்த பத்து நாளில் 'ஆபீஸ் போயிட்டு வரேன்' என்று போனவன் இரவாகியும் வரவில்லை.. வந்தது அவன் அல்ல அவன் இறந்து விட்டான் என்ற செய்தி மட்டும் தான் வந்தது.

தன் உலகமே இருண்டு போனது போல் உணர்ந்தவள் ஆற்றுவோர் தேற்றுவோர் எவரும் இல்லாமல் அழுது கரைந்தாள்.

அனைத்து காரியங்களும் முடிந்து அவளும் அவளின் பசங்களும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

அவன் இருந்தவரை வெளியில் கூட வராதவளுக்கு இப்பொழுது அனைத்தும் அவள் தலையில் சுமத்தப்பட திக்கு தெரியாத காட்டில் விட்டது போல ஆகிவிட்டது.

சேமித்து வைத்திருந்த அனைத்தும் அவர்களின் செலவுக்கும் பிள்ளைகளின் மருத்துவ செலவுக்கும் சரியாக இருந்தது.

மூன்று வருடங்கள் கடந்துவிட்டது பிள்ளைகளும் சற்று பெரியவர்களாகி இருக்க அவர்களை பள்ளியில் விட்டு வந்தவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போன உணர்வு.

அப்பொழுதுதான் மீண்டும் ஜோசப்பை பார்த்தாள்.. அவள் அவனை கண்டும் காணாததும் போல் கடந்து செல்ல அவள் வழியை மறித்து நின்றான்.

ஹே பேபி என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி போற என்று வினவ உன்கிட்ட பேச ஒன்னும் இல்ல எனக்கு வேலை இருக்கு நான் போறேன் என்று போய் விட்டாள்.

ஆனால் ஜோசப் அவளை விடுவதாக தெரியவில்லை.. மீண்டும் மீண்டும் அவளை சென்று பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தான்.

தனியே இருக்கும் போது தேவைப்படும் உதவிகளை செய்து வந்தான். அதன் பிறகு வீட்டுக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டவன் வந்துபோக இருந்தான்.

ஜோசப் வீட்டுக்கு வருவது ராமுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

தன் தாயிடம் வந்து அவர் எதுக்கும்மா நம்ம வீட்டுக்கு அடிக்கடி வராரு இனிமே வரக்கூடாதுன்னு சொல்லுமா என்று அவன் தன் தம்பியை அழைத்துக்கொண்டு விளையாட சென்று விட்டான்.

ஷைலுவும் ஜோசப்பும் ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகியது.

தங்களின் பிள்ளைகளை உலகமே திரும்பி பார்க்க வேண்டுமா? வாருங்கள்.. எங்கள் ப்ரைன் ஆக்டிவேஷன் சென்டருக்கு.

தங்களின் பிள்ளைகளின் மூளையை தூண்டுவதன் மூலம் கண்களை கட்டினால் கூட உங்க பிள்ளைகள் ஒரு எண்ணையோ அல்லது எதிரில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முடியும்.

வாருங்கள்.. உங்கள் பிள்ளையும் சாதனை படைக்க வேண்டுமா வந்து எங்கள் பிரைன் ஆக்டிவேஷன் சென்டரில் சேர்ந்து பயன் அடையுங்கள் என்று விளம்பரம் ஒளிபரப்பாகியது.

இதனை கண்ட ஜோசபின் மனதில் அந்த விபரீத ஆசை எழ ஷைலுவிடம் இதனைப் பற்றி பேசினான்.

இந்த சென்டர்ல சேர்த்துவிடலாம் ஷைலு ராமுக்கு இருக்கிற அறிவுக்கு அவன் டாப்ல வருவான் என்று அவளிடம் கூறினான்.

அவள் சற்று யோசிக்கவும் இவன் மட்டும் அந்த சென்டர்ல போய் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்துட்டா அவ்வளவுதான்.. அப்புறம் நாம அதுபோல ஸ்கூல் ஆரம்பிச்சு செமையா சம்பாரிக்கலாம்.. என்ன சொல்ற? என்று அவள் மனதை கரைத்தான்.

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் ஷைலு மட்டும் விதிவிலக்கா என்ன? 

அவளும் ராமை அந்த சென்டரில் சேர்க்க சம்மதம் தெரிவித்தாள்.

ராமை அழைத்து சென்று அந்த சென்டரில் சேர்த்துவிட்டனர்.

அவனிடம் வேறு ஸ்கூல் என்று பொய் சொல்லி தான் சேர்த்து இருந்தனர்.. அவன் தன் தாயிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தான் ஆனால் அவள் மனம் இரங்கவில்லை..

அம்மா எனக்கு இந்த ஸ்கூல்ல நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க அம்மா நான் இங்கேயே படிக்கிறேன் என்று கூறியும் அவள் கேட்கவில்லை..

இல்லடா கண்ணா அம்மா சொல்றதை கேட்கணும் அந்த ஸ்கூல்ல விட இங்க நல்லா சொல்லி தருவாங்க.. நான் உன்னை வந்து அடிக்கடி பார்க்கிறேன் சரியா என்று அவன் விருப்பம் இல்லாமலேயே சேர்த்து விட்டாள்.

அங்கு அவன் சென்ற பிறகு கொடுமையிலும் கொடுமை..

அங்கு வெளியே சொன்னது என்னவோ மிட் பிரைன் ஆக்டிவேஷன் எனப்படும் மனித மூளையை தூண்டுவதன் மூலம் கண்களைக் கட்டிக்கொண்டே பார்க்கலாம் எதிரில் யார் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம் என்றுதான்..

பெற்றோர்களும் அதனை நம்பி தங்களின் பிள்ளைகளை அங்கு சேர்த்தனர்.

ஆனால் அது உண்மை அல்ல ப்ரைன் ஆக்டிவேஷன் என்பது மிகப்பெரிய பொய் என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

அது தெரியாமல் தங்களின் பிள்ளை சாதனை படைக்க வேண்டுமென்ற நப்பாசையில் அவர்களை புதைகுழியில் தள்ளினர்.

அந்த ஸ்கூல் சுத்தமாக ராமுக்கு பிடிக்கவில்லை.

அனைவரும் பள்ளிக்கு வரும்படி அழைக்கவும் இவனும் சென்றான்.

அங்கு ஒருவர் தன் கட்டை குரலில் பேச ஆரம்பித்தார்.. அங்கு இருந்த குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் தான்.

அந்த மனிதர் பிள்ளைகளிடம் "இங்கு நடக்கிற விஷயத்தையும் இங்கு கற்றுக் கொடுக்கிற முறையையும் யார்கிட்டயும் சொல்லகூடாது.. உங்க அப்பா அம்மா கிட்ட கூட சொல்லக்கூடாது சரியா.." என்று கூறினார். 

பின்பு வகுப்புக்கு செல்லுங்கள் என்று விட அங்கு செல்லவும் ராமிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

யாருக்கும் தெரியாமல் வார்டன் ரூமிற்கு வந்தவன் வார்டனிடம் எங்க அம்மாகிட்ட பேசணும் என்று கேட்டான்.

அவரோ அதெல்லாம் பேச கூடாது உனக்கு இப்போ கிளாஸ் தானே போ என்று விரட்டி விட்டார்.

அங்கு இருந்த இரண்டு மாத காலமும் கொடுமைதான்.. அவர்கள் சொல்வதுபோல செய்யவில்லை என்றால் சிறு பிள்ளை என்றும் பார்க்கமாட்டார்கள் அடி வெளுத்து விடுவர்.

பின்புதான் ஒரு நாள் போலீஸ் வந்து அங்கிருந்த அனைவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

ப்ரைன் ஆக்டிவேஷன் என்பது ஒரு ஸ்கேம் என்று அறிவித்து அந்த இடத்தில் வேலை செய்த அனைவரையும் ஜெயிலில் தூக்கி போட்டனர்.

பின்பு அங்கிருந்து அனைத்து பிள்ளைகளையும் அவரவர் பெற்றோர்களுக்கு அழைத்து பிள்ளைகளை ஒப்படைத்தனர்.

சைலஜா அதனை கேள்விப்பட்டு ராமையும் அங்கிருந்து அழைத்து வந்தவள் அவனிடம் எப்படி இருக்க கண்ணா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் எப்படி என்னை விட்டு இருந்த உனக்கு நான் எவ்வளவு முறை போன் பண்ணினேன் தெரியுமா நான் இப்படி உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டேனே என்று நீலிக் கண்ணீர் வடித்தாள்.

ஜோசப் தான் அங்கு நடந்தது அனைத்தையும் அவனிடமிருந்து கேட்டுக்கொள் நமக்கு அது பயன்படும் என்று கேட்க சொன்னான்.

அது போலவே அவளும் நடிக்கவே அது ராமுக்கு எப்படி தெரியும் பாவம் தன் தாய் உண்மையாகவே அழுகிறாள் என்று நினைத்துக் கொண்டவன் தானும் அன்னையை கட்டிக்கொண்டான்.

பின்பு வீட்டிற்கு வந்ததும் பேச்சுவாக்கில் அவனிடம் போட்டு வாங்க தன் தாய் தானே என்று அவனும் மடை திறந்த வெள்ளம் போல் அங்கு நடந்த அனைத்து அவலங்களையும் கூறினான்.

அம்மா அவங்க சொன்னது எல்லாமே பொய்மா அவங்க ஒரு துணி கொடுப்பாங்க எங்க கண்ணை கட்டிக்க..

அதை கட்டினாலும் எங்களுக்கு நல்லாவே கண்ணு தெரியும்.. அது மட்டுமில்லாமல் ரம்மி விளையாடுவாங்கல்ல அந்த சீட்டுக்கட்டை கொடுத்து அது என்னென்னு கண்டுபிடிக்க சொல்லுவாங்க..

அது எப்படி தெரியுமா சொல்லிக் கொடுத்தாங்க.. ஒவ்வொரு சீட்டுக்கும் ஒரு தனி ஸ்மெல் இருக்கும் இல்லனா ஓரத்தில் கண்ணுக்கே தெரியாத மாதிரி கிழிச்சுவிட்டு இருப்பாங்க இல்லனா ஏதாவது அடையாளம் வச்சிருப்பாங்க..

அதை வச்சு சொல்லணும்னு சொன்னாங்க என்று இன்னும் பல விஷயங்களை புட்டு புட்டு வைக்க அனைத்தையும் மனதில் குறித்து வைத்துக் கொண்டு ஜோசப்பிடம் கூறினாள்.

காந்தமென ஈர்க்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments