மோகமேகங்கள் மழை பொழியுதே..!
மழை-1:
அதிகாலை மணி ஐந்து முப்பது இருக்கும்.. தன் தலைவனுக்காக காத்துக்கொண்டிருந்தாள் அழகிய மங்கை.. அவளே இரவின் ராணி..
"ஏன் இன்னும் ஆது வரல..? டைம் ஆச்சே..! நான் ஸ்கெடுள் சொல்லிட்டு தானே வந்தேன்.. எப்போ பார்த்தாலும் இதே வேலை தான்.. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை.. நேரம் தவறாம வாங்கன்னா கேட்குறாரா.. இன்னைக்கும் லேட்.." என்று நிலா எப்பொழுதும் போல் புலம்பிக்கொண்டிருக்க...
"ஹே..! நிலா பொண்ணு.. நீ இருந்தது போதும்.. போய் ஓய்வெடு.. இனி நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவள் முறைப்பதைக் கண்டுக்கொள்ளாதது போல் தன் இணையான நிலவு மகளை ஓய்வுக்கு அனுப்பிவிட்டு மேகக்கூட்டங்களுடன் தன் ஆயிரம் கணக்கான ஒளி கதிர்களை கொண்டு உரசி "ஹாய்.. முகில் சாரி டா.. வர லேட் ஆயிடுச்சு.." என்று சமாதானம் செய்து ஆதவன் கொஞ்சி விளையாடிய தருணம் அது…
பெரும் பண முதலைகள் தங்கியிருக்கும் பெசன்ட் நகரில்.. நடுநாயகமாக இருந்த அந்த ராட்சத வெள்ளை மாளிகை.. பார்ப்பவர் கண்களை ஈர்க்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது.
அந்த மாளிகையை சுற்றி.. ஐந்தடி உயரம் கொண்ட மதில் சுவர் அரணாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே வலது பக்கமும்.. இடது பக்கமும்.. பச்சை நிற புற்தரைகள் அளவாக வெட்டி அழகாக பராமரிக்கப்பட்டிருக்க நடுவில் பாதை அமைக்கப்பட்டிருந்தது.
அதனருகே பூத்துக்குலுங்கும் செடிகளும்.. பலவகையான அலங்கார செடிகள் அளவாக வெட்டி பராமரித்திருக்க.. அவை அனைத்தும் அந்த வெள்ளை மாளிகைக்கு கூடுதல் அழகை சேர்த்தது.
அவ்வெள்ளை மாளிகைக்கு பின்னே இருந்த கரேஜ்ஜில் வரிசையாக பி.எம்.டபள்யூ.. பென்ஸ் என உயரக கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்க.. பக்கத்தில் பழைய அம்பாஸிடர் கார் இருக்க.. அதற்கு எதிரே பி.எம்.டபள்யூ ஜி 310 ஆர்.. கே.டி.எம் 390 டியூக் என நவீன ரக இருசக்கர வாகனங்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருக்க.. அந்த கரேஜ்ஜின் ஷட்டர் இருவரால் திறக்கப்பட்டது.
காலை வேளையில் வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் பதுங்கி பதுங்கி ஷட்டரைத் திறந்து உள்ளே வந்த இருவரும்.. கருப்பு உடையணிந்து கைகளில் கருப்பு நிறக்கையுறை அணிந்திருந்தனர்.
ஒரு வேளை திருடர்களாக இருப்பார்களோ..
அதுதான் இல்லை இந்த மாளிகையின் இன்றைய இளவரசர்கள் நாளைய ராஜாக்கள்..
வாருங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்..
"டேய் மகேன்.. அம்மா அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் டா.." என்று தன் தமயனிடம் கிசுக்கிசுப்பானக் குரலில் மொழியவே.. "டேய் காலையிலேயே வேண்டாம்.. அப்படியே அவங்களுக்கு பயப்படுற மாதிரியே எப்படி டா இப்படி சொல்ற.." என்று வாரவும் "ஹி ஹி விடுடா.." என்று அசடு வழிந்தான் வீர்.
தங்களுக்குள் பேசியவாரே இருசக்கர வாகனம் தரித்திருக்கும் இடத்திற்கு வந்தவர்கள்.. வாகனத்தின் மீது மூடியிருந்த கவரை இழுத்து.. தலைகவசத்தை அணிந்துக்கொண்டு அவரவர் வண்டியில் அமர்ந்து கரேஜ்ஜிலிருந்து வெளியே எடுத்து வந்தனர்.
"மகேன்.. லெட்ஸ் கோ..!" என்றவாறு ஆரம்பமே அதிரடியாக டாப் கியரில் காற்றைக் கிழித்துக்கொண்டு தன் நவீன புரவியில் பறந்தான் வீரேந்திர விஜயன். அவன் வேகத்தை கண்ட அவன் உடன் பிறந்தவனோ அவனை பற்றி தெரியுமாதலால் சிரித்துக்கொண்டே தன் பி.எம்.டபள்யூவைக் கிளப்பினான் மகேந்திர விஜயன்.
தன் தம்பிக்கு இணையாக தானும் தன் வண்டியை பறக்க விட்டவன்.. தன் தலைகவசத்தின் முகப்பில் இருக்கும் கண்ணாடியிலான திறப்பை மேலே ஏற்றிவிட்டு.. தனக்கு பின் இரண்டு நிமிட வித்தியாசத்தில் பிறந்த தம்பியைப் பார்த்து கண்ணடித்தவன்.. தன் வாகனத்தின் கைப்பிடியைத் திருகி தன் வேகத்தைக் கூட்ட.. அதனைக் கண்ட வீர் தன் தமயனை பார்த்து "ஹே ஹூர்ரே..!" என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டே அவனை முந்த தன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.
அதென்ன இரண்டு நிமிட வித்தியாசம்..? ஆம் விஜயன் ஜெயலெட்சுமி தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் முதலாமவன் மகேந்திர விஜயன்.. பின் இரண்டு நிமிட நேர வித்தியாசத்தில் பிறந்தவன் தான் வீரேந்திர விஜயன். இவர்கள் இருவருக்கும் ஒரு தங்கையும் இருக்கிறாள் அவள் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா இருப்பத்திரண்டு வயது மங்கை.. எம்.பி.ஏ முடித்து விட்டு தன் தந்தைக்கு தொழிலில் உதவியாக இருக்கிறாள். இருபத்தெட்டு வயது துடிப்பான இளைஞர்கள் இருவரும் தங்களின் விருப்பப்படி மருத்துவம் படித்து மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்து தாய் நாட்டிற்கு சேவை செய்திட சென்னையில் இருவரும் சேர்ந்து விஜயன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் என்ற அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையை நிறுவி குறைந்த செலவில் மக்களுக்கு தங்கள் சேவைகளை தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கின்றனர்.
இன்று ஞாயிறு ஆதலால் தங்களுக்கு பிடித்த இடமான தடா நீர்வீழ்ச்சிக்கு தத்தமது நவீன புரவியில் அவ்விடத்தை நோக்கி பறந்துக் கொண்டிருந்தனர்.
தடா அருவி சித்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசிட்டி அருகே அமைந்துள்ளது. இதனை உப்பலமடுகு நீர்வீழ்ச்சி கம்பகம் அருவி எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில் இருக்கும் அருவியை அடைய வரதையாபாளம் கிராமம் வழியாக தடா அருவிக்கு செல்லலாம்.
தங்களின் மாளிகையிலிருந்து வண்டியில் கிளம்பியவர்கள் இரண்டு மணி நேர பயணத்தை தங்கள் வேகத்தால் ஒரு மணி நேரத்தில் கடந்தவர்கள் வரதையாபாளய கிராமத்தை அடைந்ததும் அங்கு வண்டியை நிறுத்தி சற்று இளைப்பாற தன் ஹெல்மட்டை கழட்டிய வீர் பக்கத்தில் இருந்த கடையில் சென்று ஆவிப் பறக்க இரண்டு தேநீர் வாங்கி வந்து தன் தமயனிடம் ஒன்றை கொடுத்து குடிக்குமாறு சைகை செய்து தான் ஒன்றை எடுத்து பருகியவாறு சுற்றும் முற்றும் அந்த கிராமத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"டேய் வீரி நீ எப்பவும் சில்லுனு பீர் தானே அடிப்ப..? இப்போ என்ன ஆவிப் பறக்க தேநீர்.." என தன் கையிலுள்ள கோப்பையைக் கண்களால் காட்டியவாறு அவனை வம்பிழுத்துக் கொண்டே தன் பார்வையை உயர்த்தியவன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
இதனைக் கண்ட வீர் தன்னை கலாய்த்த தமையனின் பார்வை ஓரிடத்தில் நிலைக்குத்தி நிற்கவே என்னவென்று அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க "ஷிவானி டீ ஸ்டால்" என பெயர் பலகையில் எழுதியிருக்க அதனைப் பார்த்ததும் புரிந்துக்கொண்டான்.
அவனிடமிருந்த கோப்பையை வாங்கி வைத்துவிட்டு "டேய் மகேன் போலாம்" என்கவும் அவன் அப்படியே நிற்க அவன் புஜத்தில் தன் கையால் குத்தியவாறு "ஹே ப்ரோ.. உன் தப்பு எதுவுமே இல்லை சியர் அப் மேன் வா கிளம்பலாம்.." என்று அவனை சமாதானப் படுத்தி இருவரும் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.
வரதையப்பாளத்திலிருந்து அருவி பன்னிரெண்டு கி.மீ தொலைவில் உள்ளது. இதில் ஏழு கிலோ மீட்டர் நல்ல தாற்சாலையாகவும் பின் செம்மண் சாலையாக இருக்கவே இவ்விருவரின் வேகத்தில் புழுதிப் பறக்க வாகனம் பார்க்கிங் செய்யும் இடத்தில் நிறுத்திவிட்டு தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மலையேற ஆரம்பித்தனர்.
பச்சை பசேலென்று எங்கு பார்த்தாலும் பலவிதமான மரங்களும் பல வகையான புதர்களும் அதில் "குக்கூ" என கூவும் குயில்களும் படபடவென தன் இறக்கைகளை அடித்து பறக்கும் பல பறவைகளும் ஓரிடத்தில்லாமல் அங்கும் இங்கும் தாவும் குரங்குகளும் இருக்க முழுதும் கற்பாதைகளாகவே இருந்தது.
பத்தடி பாறைகள் கூட இருந்தது அதையும் அநாயசமாக தங்கள் வலிய கைகளை ஊணி ஏறி.. எகிறி குதித்து.. தாவி.. தாண்டி சென்று கொண்டிருக்க ஓடை வந்தது. அதனைக் கண்டதும் தன் மேல் போட்டிருந்த கருப்பு ஜாக்கெட்டை கழட்டியவன் தன் உடைகளைக் கலைந்து அதில் குதித்து நீந்தியவன் தன் தமையன் இன்னும் தண்ணீரில் இறங்காமல் இருக்கவும் "கமான் ப்ரோ.." என்று தண்ணீரை அவனை நோக்கி அள்ளித் தெளிக்க அவன் மேல் பட்டுக் தெறித்தது.
"ப்ரோ.. வாடா உன் கட்டுடல் மேனியைப் பார்க்க ஆவலோட இருக்கேன்" என்று நக்கலாகக் கூறவும் "டேய்..! வந்தேன்னு வை.." என்று தன் ஒற்றை ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரித்தவன் தன் உடைகளைக் கலைந்துவிட்டு நிற்க "ஏன் டா..? அந்த பழனி படிக்கட்டை காட்டிட்டு நிக்குற.. உள்ளே குதிடா.. யாராவது..? வந்து ஏறி பழனிக்கு போய்ட போறாங்க..!" என்று அவன் சிக்ஸ் பேக்கை கலாய்த்தான்.
அதனை கேட்டவன் சிரித்துக் கொண்டே தொப்பென்று அவன் எதிர்ப்பாராத நேரம் குதிக்க டேய் என்றவன் பின் இருவரும் சற்று நேரம் நீந்திவிட்டு தண்ணீர் மேலே அப்படியே கண்களை மூடியவாறு மிதந்துக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் அப்படியே இருக்க இருவரும் நீரிலிருந்து எழ அங்கு டிரக்கிங் போக வந்திருந்த கல்லூரி பெண்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தண்ணீரில் நனைந்து கண்ணை மறைத்த முடிக்கற்றைகளை தன் வலியக் கரங்களால் பின்னால் தள்ளிவிட்டு.. தண்ணீரிலிருந்து எழ செதுக்கி வைத்த படிக்கட்டுகளிலிருந்து விழுந்த தண்ணீரைக் கண்டதும் அவன் ஆளுமையான தோற்றத்தைக் கண்டு சொக்கித்தான் போயினர் மங்கையர் அனைவரும்.
ஆனால் பார்க்க வேண்டியவனோ.. அங்கு யாரும் இல்லாதது போலவே எதையும் கண்டுக்கொள்ளாமல் எந்த வித உணர்வையும் தன் முகத்தில் காட்டாமல் அருவியை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினான்.
அவன் பின் எழுந்த வீர் தன் கட்டுடல் மேனியை.. பாடிபில்டர் போல் போஸ் கொடுத்து.. தன்னை பார்த்த பெண்களைக் கண்டு ஸ்டைலாக தன் ஒற்றைக் கண்ணடித்தவன்.. அவர்களை நோக்கி பறக்கும் முத்தமொன்றை அனுப்பிவிட்டு அவர்கள் தன் செயலுக்கு "ஓ..ஹோ" எனக் கத்துவதைக் கேட்டு சிரித்துக்கொண்டே தன் தமையனைப் பின் தொடர்ந்தான்.
தன்னை தொடர்ந்து வந்தவனைத் திரும்பி பார்த்து.. "இங்க வந்தும் உன் சேட்டையை நிறுத்து மாட்டியாடா..?" என அலுத்துக்கொண்டாலும் தன் தம்பியின் செயலை ரசிக்கவே செய்தான். "என்ன ப்ரோ..? இதெல்லாம் கூட இல்லைன்னா போரடிக்கும்.. நம்மை பார்த்து பறந்து வரும் பட்டாம்பூச்சிகளை ரசிக்கிறதில் தப்பில்லையே..?" என்று கேட்டவன் தன் தமையனுடன் அருவியை நோக்கி சென்றான்.
வாங்க வாங்க அவங்க அருவிக்கு போகட்டும் நாம நம்ம ஹீரோஸ் பற்றி பார்க்கலாம். மகேன் கலகலப்பானவன் தான் ஆனால் தன் கல்லூரியில் நடந்த ஓர் நிகழ்வினால் அமைதியானவன் தான் அதிலிருந்து அவனுடைய கலகலப்பு குறைந்து விட்டது. மிகவும் பொறுமையானவன்.. எதையும் எடுத்தோம் கவுத்தோமென்று செய்ய மாட்டான்.. தன் குடும்பத்தின் மேல் அதீத அன்பு கொண்டவன். இவன் கலகலப்பை மீட்டெடுக்க வரும் அந்த காரிகை யாரோ..?
வீர் யாருக்கும் அடங்காத அரட்டை.. அவன் இருக்கும் இடம் சிரிப்பினால் நிறைந்திருக்கும்.. எவ்வளவுக்கெவள்ளவு நகைச்சுவையானவனோ அந்தளவுக்கு கோபமும் பொத்துக்கொண்டு வரும்.. மூக்கு நுணியில் கோபம் நர்த்தனம் ஆடும்.
மகேன் அமைதியாய் இருந்து காரியம் சாதிப்பவனென்றால்.. வீர் எதிலும் எங்கும் அதிரடி தான்.. அவன் சிங்கமென்றால் இவன் வேங்கை..
இங்கு இருவரும் அருவிக்கு வந்தவர்கள்.. உச்சியிலிருந்து பாலென கொட்டும் அருவியில் நனைந்து.. சிறுவர்களாக ஆர்ப்பரித்தவர்கள் தங்கள் வீடு நோக்கிப் பயணித்தனர்.
அங்கு வீட்டிலோ.. தன் மகன்களைக் கண்ணால் காணும் வரை.. தனக்கு நிம்மதியே இல்லையென்று.
. பெற்ற மனம் தன் புதல்வர்களை எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது.
மழை பொழியும்...
0 Comments