Advertisement

Ad code

Devan-2



 தேவநிலா - 2:


நிலா இன்று காலையில் எழுந்ததும் ஜாகிங் சென்று விட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் ஆரஅமர அப்பொழுதுதான் காபி குடிக்கலாம் என கோப்பையில் எடுத்து சுடச்சுட ஊற்றினாள்.


நேற்று இரவு நைட் ஷூட்டிங் இருந்ததினால் பன்னிரெண்டு மணியளவில் தான் வீட்டிற்கு வந்தாள். வந்தவளுக்கு அத்தனை நபர்கள் இருக்கும் அவ்வீட்டில் ஒருவர் கூட சாப்பிடு என்று கூற எவரும் இல்லை.


நேரம் அதிகம் ஆகும் என்பதால் அபியை முன்பே வீட்டிற்கு அனுப்பியிருந்தாள். இவள் வந்த அடுத்த இரண்டு நிமிடத்தில் அபி தூக்கக்கலக்கத்தில் தன் அறை கதவை திறந்து கொண்டு வந்தாள்.


"அக்கா இப்போதான் வந்தியா? பிரஷ் ஆகிட்டு வா அக்கா சாப்பிடலாம்" என்று அழைக்க "நீ ஏன் அபி எழுந்து வந்த? நீ போய் தூங்கு.. நான் பார்த்துக்குறேன்" என்று அவளை அனுப்பி வைத்தவள் அந்த நேரத்தில் சாப்பிட தோணாமல் ஒரு டம்ளர் பாலை சுட வைத்து குடித்து விட்டுத் தூங்கி விட்டாள்.


காலையில் எழுந்ததுமே 'எனக்கு பசிக்குது' என்று அவள் வயிறு கூப்பாடு போட ஜாகிங் சென்று விட்டு காபி தனக்காக தானே வார்த்துக் கொண்டவள் அதனை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்து அமர்ந்தாள்.


இயற்கை காற்றை ஆழ மூச்செடுத்து தன் நுரையீரல் முழுவதும் நிரப்பிக் கொண்டவள் அந்த காபியை குடிக்க வாய் அருகில் எடுத்து செல்லவும் அவள் தாய் வரவும் சரியாக இருந்தது.


தன் எதிரே வந்து அமர்ந்தவரை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் தான் பாட்டுக்கு கையில் இருந்த காபியை குடித்தாள்.


"தீக்ஷி உன்னை கேட்காம ஒன்னு செஞ்சிட்டேன் இதை மட்டும் செஞ்சிடு இதுப்போல இனி நடக்காது" என்று எப்பொழுதும் கூறுவது போலவே இப்பொழுதும் கூறினார்.


"என்னை கேட்காமல் தான் எல்லாத்தையும் செய்றீங்க இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது எப்பொழுதும் இப்படித்தானே நடக்குது.."


"என்ன பண்ணி தொலைச்சீங்க என்னை எவனுக்காவது வித்துட்டீங்களா?" என்று எகத்தாளமாக கேட்க "தீக்ஷி" என்று உரக்க கத்த "ஆஹ் காது கொய்யுங்குது" என்று தன் விரலால் காதை குடைந்து கொண்டவள் "உண்மையைத் தானே சொன்னேன்.." என்று ஒரு மிடறு காப்பியை குடித்தவள் அவரை எகத்தாளமாக பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.


"நீங்க அப்படி பண்ணக்கூடிய ஆளு தானே? ஆனால் நீங்க அப்படி நினைச்ச அடுத்த செகண்ட் இந்த உலகத்துலேயே நீங்க இருக்க முடியாது. அதனால் அந்த மாதிரி ஒரு எண்ணம் உங்க மனசில் இருந்தா இப்போவே அந்த எண்ணத்தை அடியோட அழிச்சிடுங்க என்ன புரியுதா..?"


"என்ன தீக்ஷி? இப்படியெல்லாம் பேசுற உன்கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு பதிலை நான் எதிர்ப்பார்க்கலை.. நான் உன் அம்மாடி" என்று அவர் கூற விரக்தியாக சிரித்தவள் "எதிர்ப்பார்த்திருக்கணும் ஏன்னா நீங்க நடந்துக்குறது அப்படி.. உங்க மனசை தொட்டு சொல்லுங்க நீங்க எனக்கு அம்மா மாதிரியா நடந்துக்குறீங்க?" என்று நாக்கைப் பிடுங்குவது போல் கேட்டாள்.


ஆனால் இதுக்கெல்லாம் அசருபவரா காஞ்சனா "அப்படி எல்லாம் ஒரு நாளும் நடக்காது தீக்ஷி இந்த ஒரு முறை மட்டும் ஓகே சொல்லிடு நான் அட்வான்ஸ் வேற வாங்கிட்டேன்" என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டார்.


அவர் முகத்தை பார்க்க பார்க்க அவள் கையில் வைத்திருந்த சுடு காபியை அவர் முகத்தில் ஊத்த வேண்டுமென்பது போல் வெறி வந்தது.


(அப்போ அவர் சொல்ல போற விஷயத்தைக் கேட்டால் கண்டிப்பா காஞ்சனாவுக்கு காபி அபிஷேகம் கன்பார்ம்)


"இனி ஒரு தரம் இப்படி என்னை கேட்காமல் ஏதாவது பண்ணுங்க அப்பறம் இருக்கு.. உங்களுக்கு நானும் போனா போகுது எதுவும் சொல்லக் கூடாதுன்னு பார்த்தா ரொம்ப ஓவரா தான் போறீங்க.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு பார்த்து இருந்துக்கோங்க.."


"நான் பழைய விரல் சூப்புற நிலா கிடையாது..என் தேவனுக்கு நான் எப்போவோ சொந்தமாகிட்டேன் இந்த தேனு என்னைக்குமே என் தேவனுக்கு தான்.. சொன்னது புரியுதா..?"


"நீங்க ஏதாவது கோல்மால் பண்ணுறது என் பாவாக்கு தெரிஞ்சிது செதில் செதிலாக்கிடுவான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.."


"ஹுக்கும் அவன் இந்நேரம் எங்க எவக்கூட சேர்ந்து கூத்தடிச்சிட்டிருக்கானோ சிறுக்கி மக இன்னும் அவனை நினைச்சிட்டு இருக்கா போல அதான் இவ்ளோ தெனாவெட்டா என்கிட்ட இப்படி பேசிட்டிருக்கா.."


"அவனுக்கு நீ பத்தோட பதினொன்னு இதுக்கூட தெரியாத கூருக்கெட்டவளா இருக்கா. எப்படியோ நமக்கு பணம் வருது அது வரைக்கும் லாபம் காஞ்சனா " என்று தனக்குள் நினைத்தவர் வெளியில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டார்.


"சரி என்ன செஞ்சு வச்சீங்க யாருக்கிட்ட கையெழுத்து போட்டு எவ்வளவு அட்வான்ஸ் வாங்குனீங்க" என்று கேட்க அவர் கையைப் பிசைந்தார்.


அவர் முகத்தையும் கையையும் பார்த்தவள் "என்ன உங்க முகரக்கட்டையைப் பார்த்தா எனக்கு பிடிக்காத விஷயம் தான் ஏதோ பண்ணிருக்கீங்க.."


"அது…" என்று அவர் சொல்லாமல் தயங்க


" ப்ச் ஓவரா பயப்படுற மாதிரி சீன் போடாம சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க.. என்னை கேட்காம செய்யும் போது இருந்த தைரியம் இப்போ இல்லையா.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. எப்படி உங்களால இப்படி இருக்க முடியுது.. நம்பிடுவேன்னு கனவுல கூட நினைக்காதீங்க.."


"ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் தான் நான் வெளியே நடிக்கிறேன் நீங்க வீட்டுல நடிக்கிறீங்க.. இப்போ அப்படியே எனக்கு பயப்படுற மாதிரி எப்படி உங்களால இப்படி நடிக்க முடியுது."


ஒரு ஜவுளி கடையின் பெயரை கூறி "நீ தான் நடிச்சு கொடுக்கணும் எப்படியாவது உங்க பொண்ணை சம்மதிக்க வச்சிடுங்க என்று அந்த பெரிய மனுஷன் வீடு தேடி வந்து கேட்டுட்டு போறாரு.. வீட்டுக்கு வர லக்ஷ்மியை வேண்டாம்னு சொல்லக் கூடாது தீக்ஷி.." என்று கூறினார்.


"யாராவது பணம்னு சொல்லி கொடுத்தா பல்லை இளிச்சிட்டு வாங்கிடுறது ச்சே " என்று தலையில் அடித்துக் கொண்டவள் "நீ எப்போதான் திருந்தப் போறியோ.."


"தயவு செஞ்சு இந்த மாதிரி விளம்பரத்துக்கு நடிக்க யாராவது கேட்டு வந்தா பணத்தை வாங்கிடாத..அப்படி இனி ஒரு தரம் வாங்கினா நான் இனி எந்த படமும் நடிக்க மாட்டேன். சினிமா துறையே வேண்டாம்னு பிரஸ் மீட் அரேஞ்சு பண்ணுவேன் பார்த்துக்கோ" என்று அவருக்கு பயம் காட்டினாள்.


அவருக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.


அதுப்போலவே அவரும் அவள் சொல்வதைக் கேட்டுப் பதறியவர் "இல்லை அப்படி எல்லாம் எதுவும் செய்திடாதே தீக்ஷி, நான் இனி இது போல வாங்க மாட்டேன்" என்றார்.


"பாவி மகளே கொஞ்ச நேரத்துல என் இதயமே நின்னுடுச்சு.. நீ நடிச்சா தானே காசு வரும் சொகுசா வேற வாழ்ந்தாச்சு இனிமே இதில்லாம இருக்க முடியாது அதை தெரிஞ்சு வச்சுக்கிட்டு எப்படி வேணும்னே சொல்லுறா பாரு சிறுக்கி மக" என்று உள்ளுக்குள் அவளை வசைப்பாடினார்.


"சரி எவ்வளவு அட்வான்ஸ் வாங்கின?" என்று கேட்க 


"இருபது லட்சம்" என்கவும் 


"என்ன இருபது லட்சமா?" என்று அதிர்ந்தவள் 


"அப்போ அமெளண்ட் எவ்வளவு பேசிருக்க?" என்று கேட்க 


"ஐம்பது லட்சம்" என்று கூறவும் எதைக் கொண்டு தன் தாயை அடிப்பது என்று யோசிக்க தொடங்கி விட்டாள்.


"ஏன் மா உனக்கு அறிவு இல்லையா ஒருத்தன் எவ்வளவு பணம் தந்தாலும் வாங்கி அப்படியே வச்சுப்பியா.. வயசான காலத்துல கூட ஏன் தான் பணம் பணமுன்னு இப்படி அலையுறியோ ச்சே உன்னை எல்லாம் திருத்தவே முடியாது" என்று அவரை சாடியவள் எழுந்து தன் அறைக்கு வந்து விட்டாள்.


"என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டாங்க போல.. கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி? நான் பாட்டுக்கு ஜாலியா இருந்தேன் எனக்கு ஏன் சினிமாவில நடிக்கணும்னு ஆசை வரணும்..? வந்து இப்படி இதுங்ககிட்ட பாடா படுறேன் எல்லாம் அந்த ராட்சசனால வந்தது இதுக்கெல்லாம் நீ என்கிட்ட அனுபவிப்ப பாவா அப்போ உன்னை வச்சு செய்யிறேன்." 


(யார் யாரை வச்சு செய்யுறாங்கன்னு அப்போ பார்க்கலாம் தேனு)


"அம்மாவாம் அம்மா இவ என்னைக்கு எனக்கு அம்மாவா நடந்துருக்கா இப்போ வந்து நான் உன் அம்மா டி ஆயா டின்னு கடுப்பேத்திட்டு இருக்காங்க.."


பக்கத்தில் இருந்த தன் போனை எடுத்தவள் அபிக்கு அழைத்தாள்.


அப்பொழுது தான் நல்ல உறக்கத்தில் இருந்த அபி தன் போனின் சத்தம் கேட்டு "எவன்டா அவன் மிட்நைட்ல போன் போடுறது" என்று கத்திக்கொண்டே எழுந்து தன் போனை பார்க்க ஆவேசமானாள்.


"புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்னை தூக்கத்துல இருந்து எழுப்பிவிடுறதே வேலையா வச்சிருக்காங்க கொடுமைடா சாமி" என்றவள் தன் தமக்கையின் அழைப்பை ஏற்றாள்.


***


நேற்று இரவு நிலா வீட்டிற்கு வந்ததும் அபியின் மொபைல் அடித்தது தூக்கக் கலக்கத்தில் எழுந்தவள் "யாரு இந்த நேரத்துல போன் பண்றது" என்று எடுத்துப் பார்க்க அதில் தெரிந்த நம்பரைக் கண்டதும் உடனே அழைப்பை ஏற்று "மாமா என்னாச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டாள்.


"ஹேய் ரிலாக்ஸ் ஹனி வந்துட்டா நீ போய் சாப்பிட கொடுத்து தூங்க வச்சிடு" என்றவன் அவள் பதிலை எதிர்ப்பாராமல் வைத்து விட்டான்.


"டேய் உண்மையில் உங்க லவ் டார்ச்சர் என்னால தாங்க முடியல சாமி.. எப்பொழுதும் பீதியிலேயே வச்சிருக்குங்க"


****


இப்பொழுது "அக்கா என்னாச்சு" என்று கேட்க "அந்த ஜவுளி கடையில் ஷூட்டிங்.. டீட்டைல்ஸ் உங்க அம்மாகிட்ட கேட்டுட்டு கிளம்பு" என்றவள் வைத்து விட்டாள்.


"கடையில் ஷூட்டிங்கா? அக்கா தான் இதுப்போல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாலே அப்புறம் எதுக்கு இந்த அம்மா பணம் வாங்குதோ ச்சே " என்று கிளம்ப சென்றாள்.


அங்கு அனைவரும் காலையில் உணவு உண்டு கொண்டிருக்க அபி குளித்துவிட்டு கீழே வந்தாள்.


அங்கு பங்கஜம் அமர்ந்திருக்க அவரை நெருங்கியவள் "உனக்கு சோறு ஒரு கேடா" என்று திட்டவாரம்பிக்க அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே இல்லை.


அவர் பாட்டுக்கு உணவை அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருக்க "ஏன் என்னாச்சு அபி?" என்று சூர்யா கேட்டான்.


அனைவருக்கும் மூத்தவன்.. தேன்நிலாவிற்கு கூடப்பிறந்தவர்கள் மூவர்..


வேதாச்சலம் பங்கஜம் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் முதலாமவன் சூர்யா அடுத்து தேன் நிலா அபிநயா கடைக்குட்டி விஜய்.


விஜயின் இரண்டாம் வயதில் ஒரு விபத்தில் வேதாச்சலம் இறந்து விட முன்பு இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் இப்பொழுது ஒரு வேளைக்கே திண்டாட்டமாகி விட்டது.


பங்கஜத்திற்கு வீடு வீடாக சென்று கதை பேசவே நேரம் போதவில்லை இதில் பிள்ளைகளின் வயிற்றை கவனிக்க நேரமேது.


பசிக்கொடுமையில் பிள்ளைகள் இருக்க பொறுப்பற்ற தன் அம்மாவை நினைத்து வெறுப்பாக இருந்தது.


சூர்யாவிற்கு அப்பொழுது பத்து வயது இருக்கும்.. ஊரில் சிறு சிறு வேலைகள் செய்து அதில் வரும் பணத்தில் தனக்கும் தன் தம்பி தங்கைகளுக்கு உணவு வாங்கிக் கொள்வான்.


பல நாட்கள் பணம் குறைவாக இருந்தால் தம்பி தங்கைகளுக்கு மட்டும் சாப்பிட கொடுத்து இவன் பட்னி கிடந்த நாட்கள் அதிகம்.


இதையெல்லாம் கவனித்த நிலா தன் அண்ணனிடம் சென்று "அண்ணா நான் ஏதாவது வேலைக்கு போறேன் நீ மட்டும் ஏன் கஷ்டப்படுற? உனக்கு படிக்க பிடிக்கும்தானே நீ போய் படி நான் வேலை செய்யிறேன்" என்று கூறினாள்.


"அட என் தங்கம் எப்போ இவ்ளோ வளர்ந்தாங்க" என்று அவள் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன் "நான் வேலை செஞ்சிட்டே படிக்கிறேன் நீயும் படிக்கணும் நம்ம தம்பி தங்கச்சியும் படிக்கணும்" என்று கூற "எனக்கு படிக்கவே பிடிக்கலை அண்ணா" என்று அவனுக்கு தன்னிலையை கூறினாள்.


"அப்படி சொல்ல கூடாது நிலா நமக்கு அடிப்படையாவது தெரிஞ்சிக்கணும் அதுமில்லாம பள்ளிக்கூடம் போனா ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும்.."


"நாம மூண் பேரும் போவோம் தம்பி அடுத்த வருஷத்துல இருந்த அவனும் வரட்டும் சரியா ஒரு பன்னிரெண்டாவது வரைக்குமாவது படிடா அப்புறம் நாம பார்த்துக்கலாம்" என்று தன் தங்கைக்கு அறிவுரை கூறினான்.


ஆக மொத்தத்தில் தான் பெற்ற பிள்ளைகளை பார்க்காமல் அவர்கள் சாப்பிட்டார்களா உறங்கினார்களா என்ன செய்கிறார்கள் என்று கூட பாராமல் ஊர் கதை பேசிக் கொண்டும் அடுத்தவரைத் தூற்றிக் கொண்டும் இருப்பது தான் பங்கஜத்தின் வேலை.


*****


சூர்யாவிடம் அபிநயா பங்கஜம் செய்த வேலையைக் கூற ஆவேசமானவன் "நீ எல்லாம் எப்போ தான் திருந்தப்போறியோ வயசு தான் ஆச்சே தவிர கொஞ்சம் கூட புத்தி இல்லை" என்று அவரை சாடினான்.


அவரோ அப்படி ஒருவன் அங்கு இருப்பது போலவே கண்டுக்கொள்ளவில்லை.


"என் தங்கச்சி எவனுக்கும் விளம்பரம் நடிச்சு கொடுக்கணும்னு அவசியம் இல்லை. அவ இதை நடிக்க மாட்டா நீ கையெழுத்து போட்டா போய் வாங்கின பணத்தை நீயே கொண்டி கொடுத்திடு" என்று கூற சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு புரையேறியது.


அவர்தான் நேற்று வாங்கிய பணத்தை அவர் சைசுக்கு ஒட்டியாணம் செய்ய நகை கடையில் அட்வான்ஸ் கொடுத்து விட்டாரே இப்பொழுது பணத்தை திருப்பிக் கொடுக்க சொன்னால் அவரெங்கு போவார்.


"ஐயோ என் தலையில் இப்படி மண்ணள்ளி போடுறானே" என்று உள்ளுக்குள் கதறியவர் அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டார்.


அப்பொழுதுதான் கிளம்பி கீழே வந்தவள் தன் அண்ணனை பார்க்க சூர்யா நிலாவிடம் "நிலா போதும் நீ இவங்களுக்காக பண்ணினது இனிமேலும் நீ பாவம் பார்க்காத அதான் தலைமேல் ஏறி ஆடுறாங்க" என்று கூற "என்ன பண்றது அண்ணா நான் இவங்களுக்கு பெண்ணா பிறந்துட்டேனே" என்று விரக்தியாகக் கூறியவள் சாப்பிடாமல் கூட சென்று விட்டாள்.


தொடரும்...

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments