Advertisement

Ad code

புயல் - 1


 புயலென மையம் கொண்டதோ மோகம்!


மோகம் :1


"ஐயா..ஊட்டுல இருக்கீங்களா.." என்று குரல் கொடுத்ததும் வடிவாம்பாள் வெளியே வந்தார். 


"என்ன துரை காலையிலே இந்த பக்கம்" என்று கேட்டதும் "அது... வந்து மா" என்று தயங்கியவர் பின்பு சொல்லி தானே ஆக வேண்டும் என்று "அம்மா நம்ம கதிர் தம்பி மேலயும் உங்க சொந்தக்காரப் பொண்ணு முத்தமிழ் மேலயும் பஞ்சாயத்துல புகார் கொடுத்துருக்காங்க மா அதான் பஞ்சாயத்துக்காரங்க உங்ககிட்ட சொல்ல சொல்லி அனுப்பி விட்டாக "என்றவர் "பத்துமணிக்கு பஞ்சாயத்து நடக்குற இடத்துக்கு வந்துருங்க மா... அப்போ நான் கிளம்புறேன் மா..." என்று கூறிவிட்டு சென்று விட்டார். 


வடிவாம்பாள் சென்று விஷயத்தைத் தன் கணவரிடம் கூறினார். 




"எதிர்ப்பார்த்தது தானே வடிவு எப்படியும் இதுப்போல நடக்கும்னு தெரிஞ்சது தானே"




" அந்த திருட்டுப்பயல் தான் புகார் கொடுத்துருப்பான்" என்றவர் "சரி நீ போய் முத்தமிழ எழுப்பு பாவம் ராத்திரி முழுக்க அழுது கிட்டே இருந்துச்சு". 




"கதிர் வயலுக்குப் போயிருக்கான் நான் போய் விவரத்தைச் சொல்லி அழைச்சிட்டு வரேன்" என்று சுந்தரேசன் தன் வயலுக்கு சென்றார்.




சுந்தரேசன் ஊரில் பெரிய தலைக்கட்டு அவருக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் கதிர்வேலன், சசிக்கலா பின் கடைக்குட்டி பார்த்திபன். 




கதிர்வேலன் 28 வயது ஆறடி உயரமும் அதற்கேற்ற உடலும் கொண்ட கம்பீரமான ஆண்மகன்.சசிக்கலாவை இரண்டு வருடம் முன்பு தான் பெரிய இடத்தில் மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். 




பார்த்திக்கு விவசாயத்தின் மேல் ஆர்வம் மிகுதியால் பி.எஸ்.சி அக்ரி கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். இவனுடன்தான் முத்தமிழும் படிக்கிறாள். 




முத்தமிழ் 21 வயது நிரம்பிய அழகான அமைதியான பெண். வட்டமான முகம், வெண்மை நிறம், குழந்தை மனம் கொண்ட குமரியவள்.




அவளுக்கு அம்மா வசந்தி மட்டும்தான். அவளின் தந்தை முத்தமிழ் சிறு வயதாக இருக்கும்போதே மூலைக் காய்ச்சல் வந்து படுத்தவர்தான் பின் ஏழவே இல்லை. 




சுந்தரேசனின் தூரத்து சொந்தம்தான் வசந்தி அவருக்கு தங்கை முறை வேண்டும். வசந்தி கணவன் இல்லாமல் கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்து சுந்தரேசன் உதவி செய்ய முன் வந்தார். 




அவரோ "எனக்கு உங்ககிட்ட ஒரு வேலை மட்டும் போட்டுக் கொடுங்க அண்ணா... நான் வேலை செஞ்சு என் பிள்ளைக்கு கஞ்சி ஊத்திகிறேன்.." என்றார் அந்த வைராக்கியம் நிறைந்த பெண்மணி. 




முத்தமிழின் ஐந்து வயதில் இந்த ஊருக்கு வந்தார். தன்னால் முடிந்தவரை உழைத்துத் தன் மகளைக் கல்லூரியில் படிக்கும் அளவிற்கு கொண்டு வந்தார்.




சுந்தரேசனின் செங்கல் சூலையில் பின்பு வயல்களிலும் வேலை செய்வார். முத்தமிழும் தன் அம்மாவின் கஷ்டம் உணர்ந்து நன்றாக படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கி தேர்ச்சிப் பெற்று இருந்ததால் கவுன்சிலிங்கில் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது. 




தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை தன் மகளை ஒரு வேலை செய்ய விடமாட்டார். தன் பெண்ணைப் பூப்போல் பார்த்துக்கொள்வார். 




முத்தமிழ் பத்து நாட்களுக்கு முன்பு தான் பரிட்ச்சை முடித்துவிட்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் சென்ற தன் அம்மா சாப்பிடக்கூட வரவில்லை என்றதும் தூக்குச்சட்டியில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றாள்.




அப்பொழுது கதிரின் அப்பத்தா எதிரே வரவும் வம்பிழுக்கலாம் என்று நினைத்தவள் அவரிடம் "என்ன அம்மாயி இப்படி பண்ற"




"எவ டி இவ காலையிலேயே வம்புக்கு இழுக்குறவ நான் என்ன டி பண்ணினேன்"




"நீ எதும் பண்ணல அதான் பிரச்சனையே"




"அடி கூருகெட்ட சிறுக்கி மவளே என்ன பண்ணினேன்னு சொல்ற பண்ணலனு சொல்ற என்ன உன் மனசுல நெனச்சுட்டு இருக்க என் பேரங்கிட்ட சொல்லவா".




"ஹ்ம்ம் சொல்லு சொல்லு இதையும் சேத்து சொல்லு நான் உன் பேரனை கட்டிகுறேன்னு சொல்லு".




"அடியாத்தே வயசுக்கு தகுந்த பேச்ச பேசு டி அவன் காதுல இது விழுந்துது உன்ன உண்டில்லனு பண்ணிடுவான்".




"யாரு உன் பேரனா கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி அக்கம் பக்கம் யாரு பாக்குறாங்க என்னனு கூட பாக்காம போறாரு அவரு வந்து முன்னாடி நின்னு பேசிட்டாலும்".




"எடுறா அந்த கட்டைய என் பேரன் உனக்கு குதிரையா".




"ஆமா நீ வேனா பாத்துகிட்டு இரு உன் பேரன் மேல ஏறி சவாரி செய்யல என் பேரு முத்தமிழ் இல்ல".




"போடி போய் சாப்பாடை குடுத்துட்டு படிக்கிற வழிய பாரு".என்றவர் "எதுக்கு இந்த வெயிலில் போற ஒரு துண்ட தலையில் போட்டுட்டுப் போறதுக்கென்ன '' என்று சாடியவர் தான் வைத்திருந்த துண்டை அவளிடம் கொடுத்து விட்டு சென்றார். 




முத்தமிழ் சிரித்துக் கொண்டே தன் நடையை எட்டிப் போட்டாள். அப்பொழுது எதிரே கதிர் வரவும் அவள் சொன்னது போல் வேறு எங்கும் பார்க்காமல் பாதையிலே கண்ணாக தன் இருசக்கர வாகனத்தில் சென்றான்.




அதை கண்டு" முத்தமிழு நீ கரெக்டாதான் டி சொல்லிருக்க" என்று தனக்கு தானே சொல்லி சிரித்தாள். 




தன் அம்மாவிடம் வந்து சாப்பாட்டைக் குடுத்து உண்ண சொன்னவள் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவாள். இது அவளுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட. அப்பொழுது சுந்தரேசன் அவள் அருகில் வந்து படிப்பைப் பற்றி கேட்டார்.




 "எப்படி மா படிப்பெல்லாம் போகுது எப்ப முடியுது உன் படிப்பு "என்றார்.




"மாமா.. இப்போ ஒரு மாதம் விடுமுறைக்கு வந்துருக்கேன் இன்னும் ஆறுமாதம் இருக்கு மாமா படிப்பு முடிய சரி மா " என்று அவள் தலையை தடவிவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றார்.




 வசந்தி முத்தமிழிடம் "எதுக்கு இங்க வந்த இன்னும் கொஞ்சம் நேரம் செண்டு நானே வந்துருப்பேன்ல "என்றவர் "சரி நீ கிளம்பு இங்க கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்" என்றவர் அவளை அனுப்பி வைத்தவர் தன் வேலையைப் பார்க்க சென்றார். 




அப்பொழுது சுந்தரேசன் வந்து ஏதோ பேச தயங்குவது போல தெரிய "என்ன அண்ணா என்கிட்ட என்ன கேட்கனும் எதுக்கு இவ்ளோ தயக்கம்" என்று கேட்டார்.




சுந்தரேசன் வசந்தியிடம் "நம்ம முத்தமிழ... என் மருமகளா வந்த நல்லாருக்கும்" என்றவர் "இன்னும் ஆறு மாசத்துல படிப்பு முடியுதுன்னு புள்ளை சொன்னுச்சு" என்று தயங்கியவரை "நம்ம கதிருக்கு தருவதுல எனக்கு எதும் பிரச்சனை இல்லை நானா பாத்தாலும் கதிர் மாதிரி மாப்பிள்ளை கிடைக்க என் பொண்ணு குடுத்து வச்சிருக்கனும்" என்றவர்" படிப்பு முடியட்டும் அண்ணே கல்யாணத்தை முடிக்கலாம்" என்றார். 




"இல்லமா இதுக்கு முத்தமிழ் ஒத்துக்கனும்ல கதிர் பன்னிரெண்டாவதுக்கு மேல படிக்கல.. அதான் அது மனசுல என்ன இருக்கோ என்றார்" சுந்தரேசன். 




"அதெல்லாம் நான் சொன்னா என் பொண்ணு கேப்பா அண்ணே. நீங்க கவலைப் படாதீங்க" என்றார். 




ஆனால் அப்பொழுது அவருக்கு தெரியவில்லை தான் தன் மகளிடம் இந்த விஷயத்தைக் கடைசிவரையில் சொல்ல போவதில்லை என்று…



மறுநாள் செங்கல் லோடு ஏற்றும் பொழுது சுந்தரேசன் டிரக் டிரைவரிடம் "கல்லு இறக்குறதுக்கு ஆளு இல்லையே என்ன பண்றது..." என்று பேசிக் கொண்டிருந்தார். 




அப்பொழுது அங்கு வந்த வசந்தா " நான் போறேன் அண்ணா.. கல்லு இறக்குறதுக்கு " பின்னால் டிப்பரில் கல்லின்மேல் ஏறி அமர்ந்துக்கொண்டார். 




அவர்களை அனுப்பி வைத்து தன் வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டார் சுந்தரேசன்.




 ஒரு இரண்டு மணி நேரம் கழித்து கதிருக்குப் போன் வந்தது. செங்கல் ஏற்றி சென்ற டிரக் டிரைவர் தான் அழைத்தான்.




 அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியானவன் கண்ணில் சிரித்த முகத்துடன் முத்தமிழ் தோன்றினாள். 




ஆனால் இந்த விஷயத்தைக் கேட்டால் அவள் தாங்குவாளா என்று நினைத்து தன் தந்தையை அழைத்து விவரத்தைக் கூறினான். 




சற்றுமுன் கதிரிடம் டிரைவர் வசந்தி டிப்பரில் செங்கல்லின் மீது அமர்ந்து வந்தவர் ஸ்பீட் பிரேக்கரில் வண்டி ஏறி இறங்கும் போது தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு விட்டதாகவும் இப்போழுது ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டி சென்றதாகவும் கூறி வர சொன்னான்.




சுந்தரேசனும் கதிரும் டிரைவர் சொன்ன மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சென்று மருத்தவரிடம் விசாரிக்க அவர், " அவங்க கடைசி நிமிசத்துல இருக்காங்க தலையில் பலமா அடிப்பட்டதால உயிர் பிழைக்க ரொம்ப வாய்ப்பு கம்மி தான் இருந்தாலும் எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணிருக்கோம்".




"அவங்ககிட்ட போய் பேசனும்னா பேசுங்க..." என்று விட்டு சென்றார். 




உடனே சுந்தரேசன் தன் மனைவிக்கு கைப்பேசியில் அழைத்துத் தாலி ஒன்று வாங்கி கொண்டு பின் முத்தமிழையும் தன் அம்மாவையும் ஹாஸ்பிட்டலிற்கு அழைத்து வர சொன்னார்.


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments